புகார் கொடுத்த பெண்ணின் கணவரையே அபேஸ் செய்த பெண் போலீஸ்.. அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்
புகார் கொடுக்க காவல் நிலையம் வந்த பெண்ணின் கணவரை அவருக்கே தெரியாமல் அபேஸ் செய்துள்ளார் பெண் போலீஸ்காரர் ஒருவர்.
அரியலூர்: பணம் தர மாட்டேன் என்கிறார் என்று கணவர் மீது புகார் கொடுத்தார் ஒரு பெண்மணி. ஆனால் கடைசியில், தனது கணவரையே போலீசிடம் இழந்த கதை இது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தெற்குபரணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (40). இவரது மனைவி லதா. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
செல்வகுமார் கடந்த 8 வருடங்களாக, சிங்கப்பூரில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மாதந்தோறும் தனது மனைவியின் செலவுக்கு பணம் அனுப்பி வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு செல்வகுமாரும், லதாவும் போனில் பேசும் போது, கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவியுடன் பேசுவதை நிறுத்திய அவர், மாதந்தோறும் செலவுக்கு பணமும் அனுப்பவில்லை. இதனால் குடும்பத்தை நடத்துவதில் சிரமப்பட்ட லதா, தனது உறவினர்களிடம் புகார் கூறியுள்ளார். அவர்கள் அறிவுரை கூறியும், செல்வகுமார் பணம் அனுப்பவில்லை.
கோபமடைந்த லதா, இரும்புலிக்குறிச்சி காவல் நிலையம் சென்று கணவரை கண்டிக்குமாறு அங்கிருந்த ராதிகா (33) என்ற பெண் போலீசிடம் புகார் கூறியுள்ளார். ராதிகாவும், லதாவின் கணவர் போன் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டு, பணம் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்து லதாவை அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், பணம் கேட்டு போன் செய்த ராதிகாவிடம், தனது மனைவி லதா குறித்து புகார் கூறியுள்ளார் செல்வகுமார்., மனம் இளகும்படி பேசி பெண் போலீஸ்காரரான ராதிகாவையே மடக்கிவிட்டார் செல்வகுமார். இதையடுத்து 2 பேரும் தங்களது புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து கொண்டு, காதலை வளர்த்தனர்.
இருவரும் ஊரில் வைத்து திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர். செல்வகுமார் நண்பர் மூலமாக, லதாவிடம் இத்தகவல் வந்து சேர்ந்தது. கோபமடைந்த லதா, ராதிகாவிடம் சென்று சண்டை போட்டுள்ளார். ஆனால் அவர் மழுப்பி அனுப்பி விட்டார்.
இந்நிலையில் கடந்த 24ம் தேதி சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு வந்த செல்வகுமார் 28ம் தேதி ராதிகாவை சுவாமிமலை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
இதையறிந்த லதா, இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி செல்வகுமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பெண் போலீஸ் ராதிகாவை தேடி வருகின்றனர்.
ராதிகாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 5 வயதில் மகன் உள்ளார். தம்பதிகள் பிரிந்து வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.