தமிழகத்தில் முதன்முறையாக ரயில்வேயில் பெண் “கேட் கீப்பர்கள்” –கன்னியாகுமரியில் சாதனை!
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் ரயில்வே கிராசிங் கேட் பணியில் கேரள பெண்கள் ஈடுபட்டு ஆண்களுக்கு நிகராக பணி செய்து சாதித்து வருகின்றனர்.
மனதில் உறுதி இருந்தால் பெண்கள் எந்த துறையிலும் தடம் பதிக்கலாம். அதற்கு அடையாளமாக ரயில்வே கேட் கீப்பர் பணியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கலக்குகின்றனர் பெண்கள்.
ரயில் தண்டவாளத்தை கடக்கும் ரோடுகளில் கேட் போடப்படுகிறது. ரயில் வரும் நேரங்களில் அடைத்து பின்னர் அதை திறக்கும் பணியில் இதுவரை ஆண்கள்தான் பணியில் அமர்த்தப்பட்டு வந்தனர்.
தற்போது இந்த பணியில் பெண்களும் ஈடுபடுவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குமரி மாவட்ட பல ரயில்வே கிராசிங்குகளிலும் ஆள் நியமிக்காததால் விபத்துக்கள் அதிகமானது. இதனால் ஆள் இல்லாத கிராசிங்குகளில் ஆட்களை நியமிக்க அரசியல் கட்சிகளும், பொது நல அமைப்புகளும் கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் ரயில்வே தேர்வு மூலம் தேர்வாகி, கொல்லம் ரயில்வே பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 17 பெண்கள் கேட் கீப்பர் பணிக்கு தயாராக இருந்தனர். இதில் 5 பேரை குமரி மாவட்டத்த்தில் சசீந்திரம், ஆராட்டு, தாமரைகுளம், புளியடி, பாலமோர் ஆகிய ஐந்து கிராசிங் கேட்டுகளில் நியமித்து ரயில்வே உத்தரவிட்டது. அவர்களும் மன உறுதியுடன் இந்த பணியில் சேர்ந்து சிறப்பாக செய்து வருகின்றனர். சிக்னல் கிடைத்ததும் ரயில்வே கேட்டை மூடுவதும், ரயில் சென்றதும் திறப்பதையும் ஆண்களுக்கு நிகராக வேகமாக செய்து வருகின்றனர்.
இந்த பணியை நம்பிக்கையுடன் செய்து வருவதாகவும், குடும்பத்தினரும், பொது மக்களும் நல்ல ஒத்துழைப்பு தருவதாக புளியடி ரயில்வே கேட்டில் பணிபுரியும் திருவனந்தபுரத்தை சேர்ந்த நிஷா தெரிவித்தார்.
முதலில் குடும்பத்தினர் அனுமதி தருவார்களோ என்ற பயம் இருந்தது. ஆனால் அவர்கள் தந்த ஒத்துழைப்பு மேலும் இந்த பணியில் சிறப்பாக செயல்பட வைப்பதாக அவர் மேலும் கூறினார்.