ஸ்ரீரங்கத்தின் கீதையே, மூன்றெழுத்து மந்திரமே, தியாகமே, மாதரசியே.. ஓ.பி.எஸ். பாடிய புதிய வேதம்
சென்னை: சட்டசபையில் முதல்வர் இருக்கையிலேயே அமராத முதல்வர் பன்னீர்செல்வம் ஜெயலலிதாவை ஸ்ரீரங்கத்தின் கீதையே, மூன்றெழுத்து மந்திரமே, தியாகமே, மாதரசியே, 10 கோடி மக்கள் அம்மா என அழைக்கும் தேவாரமே, தாயே.. தாங்கள் வீற்றிக்கும் திசை நோக்கி தலைவணக்கம் என்ற புகழ்ந்துவிட்டு பேச்சை துவக்கினார்.
மேலும் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானமும் கொண்டு வந்தார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட எந்த அறிவிப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டை மறுத்து பன்னீர்செல்வம் விளக்க அறிக்கை ஒன்றை வாசித்தார்.
அதில் ஜெயலலிதாவைப் புகழ்ந்து தள்ளி ஓ.பி.எஸ். பேசிய பேச்சு இதோ...
ஸ்ரீரங்கத்தின் கீதையே, தமிழர் வாழ்வு செழிக்க, விழி காட்டி, வழி காட்டியாக திகழும், அம்மா என்ற மூன்றெழுத்து மந்திரமே, காலத்தால் அள்ளித்தந்த தங்கமே..
வாழும் ஏழைகள் வாழ்வில் ஒளி ஏற்றிய பூரண ஒளியேற்றும் புண்ணியமே, ஏழை தொழிலாளிகள் உரிமை, காவரி முல்லை பெரியாறு மீட்ட விலையில்லா அருள் அள்ளித்தரும் வல்லாமை காட்டிய வீர மங்கையே...
எதிர்காலத்தில் வெப்ப சலணம் அடையும் என தீர்க்க தரிசனத்தால் மண்ணை குளிர்விக்க மழை நீர் திட்டம் தந்த மாதரசியே, மண்ணுக்கு நீரும், மாணவர்களுக்கு மடிக்கணினியும் தந்த தாயே...
செந்தமிழே, தியாகமே உருவான திருமங்கையே, தாயே! தாங்கள் வீற்றிக்கும் திசை நோக்கி தலை வணக்கம்.
இவ்வாறு ஜெயலலிதாவை ஓ.பி,எஸ். புகழப் புகழ அதிமுக எம்எல்ஏக்கள் மேஜைகளைத் தட்டிக் கொண்டே இருந்தனர்.
இதைத் தொடர்ந்து விளக்க அறிக்கை வாசித்த பன்னீர் பாராவுக்கு பாரா ஏராளமான முறை புரட்சித் தலைவி அம்மா, புரட்சித் தலைவி அம்மா, புரட்சித் தலைவி அம்மா என்று கூறிக் கொண்டே போக மீண்டும் மீண்டும் மேஜைகளைத் தட்டிக் கொண்டே இருந்தனர் அமைச்சர்களும் எம்எல்ஏக்களும்.