நெல்லை- செங்கோட்டை நான்கு வழி சாலை: உலக வங்கி ரூ.8500 கோடி நிதி உதவி
நெல்லை: நெல்லையிலிருந்து செங்கோட்டை வரை உலக வங்கி நிதி உதவியுடன் நான்கு வழி சாலை அமைக்கப்படுகிறது. மேலும் சோலார் விளக்குகள், குடிநீர் வசதிகளும் செய்யப்பட உள்ளன.
நெல்லையிலிருந்து கேரளா மாநிலம் கொல்லம் வரை சாலை வரை மிகவும் குறுகியதாக காணப்படுகிறது. பழைய பேட்டை, ஆலங்குளம், பாவூர்சத்திரம், சாலைபுதூர், தென்காசி, செங்கோட்டை வரை இந்த சாலை குறுகலாக காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது.
இந்த சாலையை மேம்படுத்தி விரிவாக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்படி நெடுஞ்சாலை துறையின் தமிழ்நாடு சாலை மேம்பாடு திட்டம் சார்பில் தமிழகம் முழுவதும் முக்கியமான குறுகிய 1500 கிலோ மீட்டர் தூர சாலை உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.8500 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நெ்ல்லையிருந்து செங்கோட்டை வரை 51 கிமீ தூரத்திற்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரோட்டின் இருபுறமும் நிலங்கை கையகப்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் முதல் கட்ட பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
நெல்லை பழைய பேட்டையில் இருந்து நான்கு வழி சாலை பணி தொடங்க உள்ளதால் பழைய பேட்டை, ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட கோட்ட பொறியாளர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
கருத்து கேட்பு கூட்டத்தில் நெல்லை பழைய பேட்டை முதல் செங்கோட்டை வரை நான்கு வழிச் சாலையாக மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக சாலையின் இருபுறமும் உள்ள மரங்கள் அப்பறப்படுத்தப்பட உள்ளன. இவற்றுக்கு பதிலாக வேறு இடங்களில் புதிதாக மரங்கள் நடப்படும்.
ஆலங்குளம் பஸ் நிலையம் பகுதியில் பொதுமக்கள் எளிதாக சாலையை நடக்கும் வகையில் மேம்பால நடைபாதை அமைக்கப்படும். ஒவ்வொரு முக்கிய பகுதியிலும் சிறிய பஸ் நிறுத்தங்கள், குடிநீர் வசதியுடன் அமைக்கப்படும். முக்கிய சந்திப்புகளில் சோலார் விளக்குகள் பொருத்தப்படும். இவ்வாறு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.