ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க சென்னை மாணவிக்கு உதவும் பொதுமக்கள்
சென்னை: இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க பொதுமக்களிடம் நிதியுதவி கோரியுள்ளார் சென்னையைச் சேர்ந்த பாக்யா சிவராமன்.
சென்னையைச் சேர்ந்தவர் பாக்யா சிவராமன். சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் சமூக சேவை குறித்த படிப்பில் தங்கப்பதக்கம் வென்றவர். ஸ்காலர்ஷிப் மூலம் மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட்டில் படித்து அங்கும் தங்கப்பதக்கம் வென்றார்.
படித்து முடித்த பிறகு அவர் சென்னையைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சமூகநலத் திட்டங்கள் குறித்த ஆதாரங்கள் சார்ந்த படிப்பு படிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படிப்புக்கு உலகம் முழுவதும் இருந்து பாக்யா உள்பட 22 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க பாக்யாவுக்கு ரூ.31 லட்சத்து 74 ஆயிரம் தேவைப்படுகிறது. அவர் இருக்கும் சூழலில் அவரால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்தி படிக்க முடியாது என்பதால் கிரவுட்ஃபண்டிங் மூலம் மக்களிடம் உதவி கோரி நிற்கிறார்.
பொதுமக்கள் இதுவரை அவருக்கு ரூ.10 லட்சத்து 15 ஆயிரம் நிதி அளித்துள்ளனர். இந்த நிதி திரட்டும் பிரச்சாரம் ஒரு வாரத்தில் முடிவடைகிறது. அதற்குள் தேவைப்படும் பணம் கிடைக்காவிட்டால் கல்விக் கடன் பெறலாம் என்று நினைக்கிறார் பாக்யா.
அதே சமயம் போதிய பணம் கிடைக்காவிட்டால் கிடைத்த பணத்தை அதை அளித்தவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு அடுத்த கல்வியாண்டில் ஆக்ஸ்போர்டு செல்ல முடிவு செய்துள்ளார் பாக்யா.