‘மொக்கை ஃபிகர்’ என்று மனுஷியை சொல்ல அதிகாரம் அளித்தது யார்.. ஆண் எழுத்தாளருக்கு பெண்கள் சுளீர்
மொக்கை ஃபிகர் என்று மனுஷியை விமர்சிக்க உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார் என்று ஜெயபாரதியை விமர்சனம் செய்த லஷ்மி மணிவண்ணனை கண்டித்து மூத்த பத்திரிகையாளர் ஜீவசுந்தரி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: யுவ புரஸ்கார் விருதுக்கு தமிழ் கவிஞர் ஜெயபாரதி தேர்வு செய்யப்பட்டார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆண் எழுத்தாளர் லஷ்மி மணிவண்ணன் அவரை மிகக் கேவலமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
ஆண்டு தோறும் அறிவிக்கப்படும் யுவ புரஸ்கார் விருதுக்கு இந்த ஆண்டு மனுஷி என்ற புனைப் பெயரில் எழுதும் ஜெயபாரதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியான உடனே பலருக்கு காதில் புகை வந்துவிட்டது.
ஆண்களுக்காக விருதுகள் வழங்கப்பட்டாலே ஆண் எழுத்தாளர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. தனக்கு அந்த விருது கொடுக்கப்படவில்லையே என்ற கடுப்பில் ஏகத்திற்கும் திட்டித் தீர்ப்பார்கள். விருதுகள் அறிவிக்கப்பட்ட உடன் அவர்களது முகநூல் பக்கங்கள் நாற்றமெடுக்கும். இந்த முறை பெண்ணுக்கு விருது என்றால் சும்மா இருப்பார்களா?
மொக்கை ஃபிகர்
நேரடியாக, பெண்களின் உடல் குறித்துதான் கேவலமாக பேசுவார்கள். அப்படி நேற்று கவிஞர் மனுஷி சிக்கிக் கொண்டார். அவருக்கு விருது அறிவிக்கப்பட்ட உடன் அவர் ஒரு மொக்கை ஃபிகர் என்று ஆண் எழுத்தாளர் லஷ்மி மணிவண்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு பெண் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்க என அனைத்து தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளன.
அதிகாரம் கொடுத்தது யார்?
மூத்த பத்திரிகையாளர் ஜீவசுந்தரி தனது பேஸ்புக் பதிவில், "ஒரு விருது அளிக்கப்படுவதில் உடன்பாடில்லை என்றால், விருதுக் கமிட்டியை விளாசுங்கள். தகுதியற்ற படைப்பு எனில், அது பற்றி விமர்சியுங்கள். அதையெல்லாம் விடுத்து, தாங்களே அனைத்துக்கும் அத்தாரிட்டி என்பதாக இறுமாப்புடன், விருது பெற்றவரை உருவம் சார்ந்து விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்?
ஆண்களின் வக்கிரம்
ஒரு பெண்ணைப் பார்த்து 'மொக்கை ஃபிகர்' என்று விமர்சிக்க உங்களுக்கு அதிகாரம் அளித்தது யார்? அப்படியானால், படைப்பு மோசம் என்றாலும் ஒரு நல்ல 'ஃபிகருக்கு' விருது கிடைத்தால் உங்களுக்கு திருப்திதானா? ஏன் இவ்வளவு வக்கிரமான சிந்தனைகளுக்கு ஆட்பட்டிருக்கிறீர்கள். விருதுகளும் சர்ச்சைகளும் பிரிக்க முடியாதவை. ஆனால், அதில் வக்கிரமும் வன்மமும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
வாழ்த்தவும் தெரியல.. வையவும் தெரியல
இதே போன்று பத்திரிகையாளர் கவின்மலர் தனது பேஸ்புக் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். "அதில் யுவபுரஸ்கார் விருதில் உடன்பாடு இல்லை, தேர்வு சரியில்லை என்று நினைப்போருக்கு அதை விமர்சிக்க உரிமை உண்டு. ஆனால் விருதுத் தேர்வு சரியில்லை என்பதை ஒருவரது எழுத்தைக் கொண்டு நிறுவவேண்டுமே ஒழிய ஒருவரது தோற்றத்தை வைத்து அல்ல. இங்கு பலருக்கு வாழ்த்தவும் தெரியவில்லை, வையவும் தெரியவில்லை. விமர்சிக்கவும் தெரியவில்லை. வன்மையான கண்டனங்கள். லஷ்மி மணிவண்ணன் தன் கூற்றை திரும்பப் பெறுவதுதான் சரியானது." என்று பதிவிட்டுள்ளார்.