ஆடியோ, வீடியோ ரிலீஸ் செய்து சவால் விடும் யுவராஜ்: கை கட்டி வேடிக்கை பார்க்கும் காவல்துறை
சென்னை: வாட்ஸ் அப்... லெட்டர் என வலம் வந்த யுவராஜ், இப்போது போலீசுக்கு சவால் விடும் வகையில் தனியார் தொலைக்காட்சியில் பேட்டி அளித்துள்ளார். பொறியியல் கல்லூரி மாணவன் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக போலீசாரால் அறிவிக்கப்பட்டுள்ள யுவராஜ் காவல்துறைக்கு எதிராக தொடர்ச்சியாக சவால் விடும் வகையில் ஆடியோ, வீடியோ என அடுத்தடுத்து ரிலீஸ் செய்தாலும் எதைப்பற்றியும் கண்டு கொள்ளாமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறது போலீஸ் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி. சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ், பள்ளிபாளையம் அருகே உள்ள தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதற்குக் காரணம் காதல் விவகாரம் என்பது தெரியவந்தது. முதலில் தற்கொலை என்று கூறப்பட்ட நிலையில், இது கொலை என்பது உறுதி செய்யப்பட்டது.
கோகுல்ராஜூம், சுவாதியும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சென்றிருந்த போது, தீரன் சின்னமலை கவுண்டர்கள் பேரவையின் நிறுவனர் யுவராஜ் தலைமையில் அங்கு வந்தவர்கள், சுவாதியை விரட்டி விட்டு, கோகுல்ராஜை அழைத்து சென்றதாக சுவாதி கொடுத்த வாக்குமூலத்தில் உள்ளது.
கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. அதன் பின்னர் தான் இந்த கொலை நடந்துள்ளது. பிரேத பரிசோதனை தகவல்களும் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தின. கண்காணிப்பு கேமராவில் உள்ள காட்சிகளில் யுவராஜ் இருப்பது, சுவாதியின் வாக்குமூலம் ஆகியவை யுவராஜூக்கு எதிராக திரும்பின.
தேடப்படும் குற்றவாளி
அதன் அடிப்படையில் விசாரித்த போலீஸ் 11 பேரை கைது செய்து, சிலரை குண்டர் சட்டத்திலும் அடைத்தது. இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக யுவராஜை அறிவித்தது. ஆனால் அவரை கைது செய்யவில்லை. தீவிரமாக தேடி வருகிறோம் என சொல்லி வந்தது காவல்துறை. ஆனால் யுவராஜோ வாட்ஸ் அப், செல்போன் பேச்சு, டிவி பேட்டி என்று அடிக்கடி ரிலீஸ் செய்து வருகிறார்.
வேடிக்கை பார்க்கும் போலீஸ்
சத்தியமங்கலம் காட்டுக்குள் இருந்து கொண்டு இரு மாநில அரசுகளுக்கு சவால் விடுத்து வந்த சந்தன மர கடத்தல் வீரப்பன் பாணியில் தான் யுவராஜின் செயல்பாடுகளும் இருந்து வருகிறது. வீரப்பன் காட்டுக்குள் இருந்து கொண்டு செய்ததை யுவராஜ் ஊருக்குள் இருந்து கொண்டே செய்கிறார். ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தால் யுவராஜ் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள முடியும் என்றால் பல்வேறு தொழில்நுட்பங்களை கையில் வைத்துள்ள தமிழக போலீசால் யுவராஜை பிடிக்க முடியாதா என்பதே அனைவரின் முன் நிற்கும் கேள்வியாகும்.
பரபரப்பு ஏன்?
போலீசில் சரணடைந்தால் தன்னை என்கவுண்டர் செய்துவிடுவார்கள் என்று பேட்டியில் கூறியுள்ளார் யுவராஜ். போலீஸ் மேல் நம்பிக்கை இல்லை என்றாலோ அல்லது போலீஸ் விசாரணைக்கு அவர் உட்பட விரும்பாத பட்சத்திலோ அவர் நீதிமன்றத்தில் சரணடைந்து, தன்னிடம் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் ஆதாரங்களை நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் வெளியிடலாம். அதை விடுத்து தலைமறைவாக இருப்பது ஏன் என்பதும், கடிதம், ஆடியோ, வீடியோ என அடுத்தடுத்து பரபரப்பை கிளப்புவதும் ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.
சாதிய கொலைகள்
கோகுல்ராஜூம், சுவாதியும் ஒரே சமூகத்தினராக இருந்திருந்தால் இந்த கொலை நடந்திருக்காது. நடக்க வேண்டிய அவசியமும் இருந்திருக்காது. இருவரும் வேறு வேறு சமூகம் என்பதாலேயே ஒரு கொலையும், அதை விசாரித்த காவல்துறை அதிகாரியும் தற்கொலை செய்து கொண்டார்.
விஷ்ணு பிரியா
கோகுல்ராஜ் கொலையில் யுவராஜூக்கு தொடர்பு உள்ளது என அறிவித்து, அவரை தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவித்த விஷ்ணுபிரியா இப்போது உயிருடன் இல்லை. விஷ்ணு பிரியாவின் மரணத்துக்கு பின்னர் அடுத்தடுத்து ஆடியோ, வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் யுவராஜ். உண்மையில் விஷ்ணு பிரியா அந்த ஆடியோவில் யுவராஜூக்கு ஆதரவாக எதையும் பேசிவிடவில்லை. பல விசயங்களை எடிட் செய்தே யுவராஜ் வெளியிட்டுள்ளார்.
கோகுல்ராஜ் மீது பழி
யுவராஜ் தனது பேட்டியில், கோகுல்ராஜ் நல்லவனல்ல. அவன் சுவாதியைப்போலவே இன்னும் சில பெண்களுடன் பழகி வந்துள்ளான்' என்கிறார். அதேபோல் குறிப்பிட்ட சமூகத்தலைவர்கள் பற்றியும் குற்றம்சாட்டுகிறார். இது மேலும் பல சிக்கல்களை உருவாக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான். அது தெரிந்தும் யுவராஜை கைது செய்யாமல் விட்டு வைத்திருப்பது ஏன் என்றும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் குற்றச்சாட்டு
கோகுல்ராஜ் கொலைக்கும், விஷ்ணு பிரியா தற்கொலைக்கும் என்ன பதில் சொல்லப்போகிறது தமிழக அரசு?