அண்ணாமலைக்கு தஞ்சையில் நடைபெற்ற திடீர் பாராட்டு விழா! திமுகவை முந்திக் கொண்ட பாஜக!
தஞ்சை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியின் விவசாய அணி சார்பில் தஞ்சையில் திடீர் பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.
அண்ணாமலை கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தான் டெல்டா பகுதியில் மத்திய அரசின் நிலக்கரி எடுக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக கூறி இந்த பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முக்கிய உணவு உற்பத்தி மண்டலமான காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி எடுப்பது தொடர்பாக ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் ஏல அறிவிப்பு வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை நீக்கிடவும், உணவு பாதுகாப்பினை உறுதி செய்திடவேண்டிய தேவையை வலியுறுத்தியும் முதலலமைச்சர் ஸ்டாலின் 4.4.2023 அன்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 5.4.2023 அன்று காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையினை இரத்து செய்திட கோரி சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த துரித நடவடிக்கையின் காரணமாக ஒன்றிய அரசு காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் ஏல அறிவிப்பினை ரத்து செய்ததாக திமுக தரப்பில் கூறப்படும் நிலையில், நிலக்கரி எடுக்கும் திட்டம் ரத்தாக அண்ணாமலை மட்டுமே காரணம் என பாஜக கூறி வருகிறது.
இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தஞ்சையில் விவசாயிகளை அணி திரட்டி இதற்காக பாராட்டு விழா நடத்தப்படும் என கி.வீரமணி அறிவித்துள்ள நிலையில், பாஜக முதல் ஆளாக முந்திக்கொண்டு அண்ணாமலைக்கு பாராட்டு விழா நடத்தி முடித்துவிட்டது.

டெல்டா பகுதி பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் பங்கேற்க வேண்டி கர்நாடக சட்டசமன்றத் தேர்தல் பணிகளுக்கு மத்தியிலும் தஞ்சை வந்து சென்றிருக்கிறார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications