திடீரென வெடித்த ராயல் என்ஃபீல்டு புல்லட்.. தரமற்ற சர்வீஸ் என டீலர் மீது நுகர்வோர் ஆணையத்தில் புகார்
தஞ்சாவூர்: ராயல் என்பீல்டு புல்லட் பைக்கை நிறுத்திவிட்டு சென்ற சில நிமிடங்களிலேயே அது வெடித்துச் சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் இஸ்மாயில். பைக் ரைடரான இவர், ராயல் என்பீல்டு புல்லட் மாடல் பைக்கை பயன்படுத்தி வந்துள்ளார்.
பல ஊர்களுக்கு பைக் மூலம் நெடுந்தூர பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர் இஸ்மாயில்.
ரூ.1.60 லட்சம் பைக்
இந்த நிலையில் கடந்த 2020 நவம்பர் மாதம் 4 ஆம் தேதி கோவையை சேர்ந்த ரைடர்ஸ் ஐகான் என்ற ராயல் என்பீல்டு டீலரிடம் இருந்து ராயல் என்பீல்டு புல்லட் 500 பைக்கை இரண்டாம் தரமாக வாங்கி இருக்கிறார். 7,000 கி.மீ. மட்டுமே ஓடிய பைக்கை ரூ.1,60,000 க்கு அவர் வாங்கி இருக்கிறார். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பைக்கை பயன்படுத்தி வந்த இஸ்மாயில், முறையாக அதை சர்வீஸ் செய்து பராமரித்தும் வந்துள்ளார்.
டீலரிடம் சர்வீஸ்
மொத்தம் 23,000 கி.மீ. தூரம் ஓடிய இந்த பைக்கில் மீண்டும் ஒரு நெடுந்தூர பயணம் செல்ல அவர் திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக பட்டுக்கோட்டையில் உள்ள JAF மோட்டார் என்ற ராயல் என்பீல்டு டீலரிடம் அவர் சர்வீஸ் செய்துள்ளார். அதன் பின்னர் பைக்கிலேயே குற்றாலம் சென்றுவிட்டு அதிராம்பட்டினம் திரும்பி இருக்கிறார் இஸ்மாயில். இந்த நிலையில், அந்த பைக்கில் தனக்கு சொந்தமான தோப்புக்கு சென்ற அவர், பைக்கை நிறுத்திவிட்டு சில அடிகள் நடந்து செல்வதற்குள் அது வெடித்துச் சிதறியது.
நுகர்வோர் தீர்ப்பாயத்திடம் புகார்
பைக்கில் பற்றி எரிந்த தீயை கட்டுப்படுத்துவதற்குள் அதன் முக்கிய பாகங்கள் தீயில் கருகின. இதனால் அதிர்ச்சியடைந்த இஸ்மாயில், மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்துக்கு கடிதம் மூலம் புகாரளித்துள்ளார். அதில், "எனது வீட்டிலிருந்து தோப்பு இரண்டை கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது. வாகனத்தை நிழலில் நிறுத்திவிட்டு 50 மீட்டர் நடந்து சென்றபோது பைக் வெடித்துச் சிதறிவிட்டது. இதனால் வாகனம் முற்றிலும் செயல் இழந்தது.
தரமற்ற சேவை
பெயர் பெற்ற நிறுவனத்திடம் இருந்து ஒரு வாகனத்தை வாங்கி இருக்கிறேன். ராயல் என்பீல்டு டீலரான பட்டுக்கோட்டை JAF மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து சேவை பெற்று வருகிறேன். இவ்வாறான தரமற்ற பொருளும் சேவையும் அளித்ததால் இந்த நிலைக்கு நான் தள்ளப்பட்டு இருக்கிறேன். எனவே தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டு உள்ளார்.
புகாரை ஏற்ற ராயல் என்பீல்டு
பெட்ரோல் டேங்கில் எரிபொருளும் குறைவாகவே இருந்ததாகவும், வெப்பம் காரணமாக வெடிப்பதற்கு சாத்தியம் இல்லை என இஸ்மாயில் தெரிவித்து உள்ளார். இதேபோல் ராயல் என்பீல்டு நிறுவனத்திடமும் தனது புகாரை அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட ராயல் என்பீல்டு, புகாரை பதிவு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருக்கிறது.