Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கும்பகோணத்தையே கலக்கிய "ஹெலிகாப்டர் பிரதர்ஸ்.." பண்ணை வீட்டில் கைதானது எப்படி? பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: கும்பகோணத்தில் நிதிநிறுவன மோசடி வழக்கில், பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் நிதி நிறுவன மோசடி வழக்கில் நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Recommended Video

    கும்பகோணத்தையே கலக்கிய ஹெலிகாப்டர் பிரதர்ஸ்.. பண்ணை வீட்டில் கைது

    பலகோடி ரூபாய் நிதிநிறுவன மோசடி தொடர்பாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த கும்பகோணத்தைச் சேர்ந்த 'ஹெலிகாப்டர் பிரதர்ஸ்' என்றழைக்கப்படும் எம்.ஆர்.கணேஷ் (40), எம்.ஆர்.ஸ்வாமிநாதன் (36) ஆகிய சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்த எம்.ஆர்.கணேஷ் - எம்.ஆர்.ஸ்வாமிநாதன் ஆகிய இச் சகோதரர்கள் அடிக்கடி ஹெலிகாப்டரில் வலம் வந்ததால் 'ஹெலிகாப்டர் பிரதர்ஸ்' என ஏரியாவாசிகளால் அழைக்கப்பட்டனர்.

    'விக்டரி ஃபைனான்ஸ்' என்ற நிதி நிறுவனத்தையும், 'கிரிஷ் பால் பண்ணை'யையும் நடத்திவரும் இவர்கள் மீது கடந்த காலங்களில் சில குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு, பின் அவையெல்லாம் எழுந்த வேகத்திலேயே அடங்கியும் போயிருக்கின்றன.

    என்ன மோசடி

    என்ன மோசடி

    ஆனால் தற்போது ரூ.15 கோடி மோசடி செய்துவிட்டதாக கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா என்பவர் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 'ஹெலிகாப்டர் பிரதர்ஸ்' நடத்திவரும் நிதி நிறுவனத்தில் கே.சி.எல் எனப்படும் தனி வருவாய் திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என நண்பர் ஒருவர் சொன்னதன் அடிப்படையில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா - பைரோஜ் பானு தம்பதியினர் ரூ.15 கோடி முதலீடு செய்திருந்தனர். ஆனால் அதற்குரிய லாபம் மற்றும் அசலை ஹெலிகாப்டர் பிரதர்ஸ் திருப்பித் தராததால் அதுபற்றி தஞ்சை மாவட்ட எஸ்.பி. தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் அத் தம்பதியினர் ஜுலை 13-ம் தேதி நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

    பணம் கேட்டால் மிரட்டல்

    பணம் கேட்டால் மிரட்டல்

    "எங்களுக்கான லாபம் மற்றும் அசலை அவர்கள் திருப்பித் தரவில்லை. பணத்தைக் கேட்டபோதெல்லாம், சாக்குபோக்குகளை சொல்லி ஏமாற்றி வந்தார்கள். சமீபத்தில் கேட்டபோது, 'பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கிறோம். கட்சியிலும் எங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது. எங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது' எனக்கூறி அவ்விருவரும் மிரட்டினார்கள். கூலிப்படையினர் மூலம் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்," என ஜபருல்லா தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

    தலைமறைவு

    தலைமறைவு

    அவரது புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ஜுலை 20ம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே அச்சகோதரர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். அவ்விருவரையும் தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.

    பண்ணை வீட்டில் பதுங்கல்

    பண்ணை வீட்டில் பதுங்கல்

    இந்நிலையில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த கணேஷ்-ஸ்வாமிநாதன் சகோதரர்கள் சென்னை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் என ஊர் ஊராக காரில் சுற்றித் திரிந்து நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பண்ணை வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் பதுங்கியிருந்தனர். அப்பண்ணை வீடு பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சோலைசிவம் என்பவருக்குச் சொந்தமானது. வீட்டை மாதம் ரூ.13,000க்கு வாடகைக்குப் பேசி சகோதரர்கள் இருவரும் அங்கே பதுங்கியிருந்தனர். இதுபற்றி தகவலறிந்த தனிப்படை போலீஸார் அங்கே சென்று அவ்விருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்து தஞ்சாவூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    சென்னையில் குடியேறிய குடும்பம்

    சென்னையில் குடியேறிய குடும்பம்

    திருவாரூர் மாவட்டம் மறையூர்தான் இவர்களது பூர்வீக கிராமம். இவர்களது தந்தை ராமதாஸ் மின்வாரியத்தில் உதவி பொறியாளராகப் பணிபுரிந்ததால் கும்பகோணம் மாதுளம்பேட்டையில் குடியேறினார். சில ஆண்டுகள் கழித்து பணியிட மாறுதலில் குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுவிட்டார்.

    சிங்கப்பூர் ரிட்டர்ன்

    சிங்கப்பூர் ரிட்டர்ன்

    அதன் பின்னர் அவர் குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றுவிட்டதாகவும், சகோரர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.ஸ்வாமிநாதன் ஆகிய இருவரும் சிங்கப்பூரில் படித்து வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் வந்த இவர்கள், விஐபி ஏரியாவான ஸ்ரீநகர் காலனியில் சொந்தமாக வீடுகட்டி செட்டிலானார்கள். கொற்கை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பசுமாடுகளுடன் பால் பண்ணை ஆரம்பித்தனர். தொடர்ந்து 'விக்டரி ஃபைனான்ஸ்' என்ற நிதி நிறுவனம் தொடங்கினர்.

    ஹெலிகாப்டரில் இருந்து விழுந்த மலர்கள்

    ஹெலிகாப்டரில் இருந்து விழுந்த மலர்கள்

    சில ஆண்டுகளுக்கு முன் எம்ஆர் கணேஷின் மகன் அர்ஜுனின் முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டபோது ஹெலிகாப்டரிலிருந்து பூக்களைத் தூவி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தங்கத் தொழில் செய்துவருவதாக சொல்லிவந்தனர். அதோடு, கொற்கை பகுதியில் ஹெலிகாப்டர் தளம் அமைத்தனர். 'ஆம்புலன்ஸ் சேவைக்கும், சுற்றுலா செல்லவும் ஹெலிகாப்டர் வாடகைக்குக் கிடைக்கும்' என நாளிதழ்களில் பெரும் செலவு செய்து விளம்பரம் செய்து, 'அர்ஜுன் ஏவியேஷன்' என்ற நிறுவனத்தையும் தொடங்கினர். 20க்கு மேற்பட்ட கார்கள் வைத்துள்ள அவர்கள் தங்களைப் பாதுகாக்க செக்யூரிட்டிகளையும் நியமித்துக் கொண்டனர். இப்படி அனைவரிடமும் தங்களைப் பற்றி பிரமாண்டமான 'இமேஜை' உருவாக்கினர்.

    இரட்டிப்பு லாபம்

    இரட்டிப்பு லாபம்

    அதன்பிறகு தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், கருப்புப் பணம் வைத்திருப்பவர்களைக் குறிவைத்து மோசடி வேலையை ஆரம்பித்தனர் என்கின்றனர் போலீஸார். தங்கள் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் எனச் சொல்லி வசூல் ஏஜென்ட்டுகளை நியமித்தனர். ஆரம்பக்கட்டத்தில், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்த அனைவருக்கும் ஓராண்டில் ரூ.1,82,000 திருப்பித் தந்துள்ளனர். இதுபற்றிய தகவல் பரவவே, அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு பொதுமக்கள் போட்டிப்போட்டுக் கொண்டு இந்நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

    யாரை இலக்கு வைத்தார்கள்

    யாரை இலக்கு வைத்தார்கள்

    இவ்வாறு, சுமார் 200 கோடி ரூபாய் வரை ஏமாற்றியிருப்பதாக தெரிய வருகிறது. இந் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்களில் பெரும்பாலானோர் முற்படுத்தப்பட்ட ஜாதியினர் ஆவர். சுமார் 30 ஆண்டுகாலம் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் உயர் பதவியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அவர்கள் அனைவரும் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு இந் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். அதேபோல, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சில புரோகிதர்களும் தங்களது சேமிப்பு பணத்தை இவர்களிடம் முதலீடு செய்துள்ளனர் என்கின்றனர் போலீஸார்.

    மாஜி பாஜக பிரமுகர்கள்

    மாஜி பாஜக பிரமுகர்கள்

    ஹெலிகாப்டர் பிரதர்களில் ஒருவரான எம்.ஆர்.கணேஷ் , முன்னதாக, பாஜகவில் இணைந்தார். அவருக்கு வடக்கு மாவட்ட வர்த்தக தலைவர் பதவி கொடுத்தது பாஜக. கும்பகோணத்துக்கு வரும் பாஜக பிரமுகர்கள் பலரும் ஹெலிகாப்டர் பிரதர் வீட்டிற்கு சென்றும் வரும் அளவிற்கு செல்வாக்கு உயர்ந்தது. ஆனால் கும்பகோணம் நகரம் முழுவதும் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் ரூ.600 கோடி மோசடி செய்து விட்டதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட நிலையில் எம்.ஆர்.கணேஷை பாஜகவிலிருந்து நீக்குவதாக கட்சி சார்பில் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+