களமிறங்க தயாராகும் 'வலதுகரம்'.. பட்டுக்கோட்டையில் விட்டதை பிடிக்கும் முடிவில் தமாகா
பட்டுக்கோட்டை: தமிழக சட்டமன்ற தேர்தலில், பட்டுக்கோட்டை தொகுதியில் வெற்றி உறுதி என்ற முழக்கத்தோடு களமிறங்க தயாராகி வருகிறது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
கன்னியாகுமரி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன்.. இந்தி, ஆங்கிலத்தில் அறிவித்த பாஜக
இதற்காக திமுக, அதிமுக கட்சிகள் தங்களது கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு கணக்கை நிறைவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, அதிமுக மிக விரைவாக செயல்பட்டுவருகிறது.
3 தொகுதிகள்
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கேட்டதோ 12 தொகுதிகள். ஆனால், 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏறக்குறைய இந்த தகவல் விரைவில் உறுதி செய்யயப்பட வாய்ப்புள்ளது. பட்டுக்கோட்டை, ஈரோடு மேற்கு, வால்பாறை ஆகிய தொகுதிகள் தமாகா-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ரைட் ஹேண்ட்
இதில், பட்டுக்கோட்டை தமாகா பெரிதும் எதிர்பார்க்கப்படும் தொகுதியாகும். காரணம் இங்கு அக்கட்சி சார்பாக களமிறங்கப் போவது என்.ஆர்.ரங்கராஜன் என்பது சுற்றுவட்டார பேச்சாக மட்டுமல்லாமல், எதிர்பார்ப்பாகவும் உள்ளது. 2001 முதல் 2011 வரை பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ.வாக இருந்த இந்த ரங்கராஜன் தான் ஜி.கே.வானின் 'ரைட் ஹேண்ட்' என்றால் அது மிகையாகாது.
கடைக்குட்டி
மறைந்த மூப்பனாருக்கு மிக நெருக்கமான என்.ஆர்.ரங்கராஜன் குடும்பத்தில் மூத்தவர். இரண்டு தம்பிகள் உள்ளனர். இரண்டாவது தம்பி அரசியல் வாடையே இல்லாதவர். பட்டுக்கோட்டையில் தொழில் செய்து வருகிறார். மூன்றாம் தம்பி, அதாவது கடைக்குட்டி தம்பியின் பெயர் என்.ஆர்.நடராஜன்.
உரிமையுடன் கேட்ட அண்ணன்
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், தஞ்சை தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் தான் கடைக்குட்டி என்.ஆர்.நடராஜன். அந்த தேர்தலில் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், திமுகவின் எஸ்.எஸ்.பழநிமாணிக்கத்திடம் தோற்றார். எனினும், கள்ளர்கள் அதிகம் நிறைந்த தஞ்சை தொகுதியில் 2,20,849 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தார் என்.ஆர்.நடராஜன். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக கூட மூன்றாமிடம் தான் பிடித்தது. அந்த தேர்தலில், 'இளையவனுக்கு சீட் கொடுங்க' என்று வாசனிடம் உரிமையுடன் கேட்டு வாங்கிக் கொடுத்தது அண்ணன் ரங்கராஜன்.
சாஃப்ட் கார்னர்
இப்போது பட்டுக்கோட்டை தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், அக்கட்சி சார்பில் என்.ஆர்.ரங்கராஜன் களமிறங்குவதும் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டது. பட்டுக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் இவருக்கு நல்ல மக்கள் செல்வாக்கு உள்ளது. அடாவடி, ஆர்ப்பாட்டம், கட்டப்பஞ்சாயத்து இல்லாத இவரது அரசியல் பாணியால் மக்களிடையே இவர் மீது 'சாஃப்ட் கார்னர்' உள்ளது.
ஜி.கே.வாசன் உறுதி
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றதால், பட்டுக்கோட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடவில்லை. இதனால், அதிமுகவின் சி.வி.சேகர் அங்கு எம்.எல்.ஏ. ஆகிவிட்டார். இப்போது, அதிமுக கூட்டணியில் மீண்டும் பட்டுக்கோட்டையில் போட்டியிடும் பட்சத்தில் தனது தளபதியும், வலதுகரமுமான என்.ஆர்.ரங்கராஜன் மூலம் வெற்றியை உறுதி செய்வதில் முனைப்போடு உள்ளார் ஜி.கே.வாசன்