ஸ்டார் தொகுதி: தங்கத்திற்கு எல்லாமே தெரியுமே.. கலக்கத்தில் ஓபிஸ் தரப்பு.. போடி களநிலவரம்!
தேனி: 3 இரண்டு முறை எளிதாக வென்ற ஓபிஎஸ்க்கு இந்த முறை போடி தொகுதி கடுமையாக மாறி உள்ளது. இதற்கு சில காரணங்களும் உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலையாட்டி, திமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட போது , போடிநாயக்கனூரி ஓபிஎஸ்க்கு எதிராக தங்கதமிழ்செல்வன் நிறுத்தப்பட்டது தான் பெரும் விவாதப் பொருளாக அன்றைக்கு பேசப்பட்டது.
தங்கதமிழ்செல்வனை, திமுக தலைவர் ஸ்டாலின் வாண்டாடாக போடி தொகுதியில் நிற்க வைத்து ஷாக் கொடுத்துள்ளார். இந்த நகர்வை திமுகவினர் மட்டுமல்ல அதிமுகவினருமே சற்றும் எதிர்பார்க்கவில்லை.
எளிமையான குணம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இரண்டு முறையும் திமுகவின் லட்சுமணனை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அதற்கு காரணம் தேனி மாவட்டம் முழுவதிலுமே ஓபிஎஸ்க்கு இருந்த தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் எளிமையாக பழகும் குணம் போன்றவை காரணமாகும்.
ஓபிஎஸ் காரணம்
இந்நிலையில் ஓ பன்னீர்செல்வத்தை எதிர்த்து, அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், தி.மு.க-வின் தேனி வடக்கு மாவட்டச் செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வன் களமிறக்கப்பட்டிருக்கிறார். இருவருக்கும் இடையேயான மோதல் தேனி அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதுமே தெரிந்த ஓன்று. அதிமுகவில் தங்கம் மீண்டும் சேராமல் போக ஓபிஎஸ்தான் காரணம் என்று கடந்த 2019ம் ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது.
கருத்து வேறுபாடு
ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ-வாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க-விலிருந்து அ.ம.மு.க-வில் இணைந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தி.மு.க-வில் இணைந்து முதலில் கொள்கை பரப்புச் செயலாளராகவும், அடுத்து மாவட்டச் செயலாளராகவும் உயர்ந்தார். அதிமுகவில் இருந்த போதே பன்னீருக்கும் தங்கத்துக்கும் இடையே மோதல் அதிகமாக இருந்தது. எதிர் முகமான தி.மு.க-வுக்கு தங்கம் வந்துவிட்டதால், இருவருக்கும் இடையே மோதல் அனல் பறக்கிறது.
இரண்டு காரணம்
போடியில் தற்போதைக்கு ஓபிஎஸ்க்கு இரண்டு பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டது. தேவேந்திர குல வேளாளர் பெயர் பிரச்னை காரணமாக தொகுதியிலிருக்கும் பிள்ளைமார் சமுதாய மக்கள், அ.தி.மு.க-வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அண்மையில் போடியில் வ.உ.சி சிலைத் திறப்பில் கலந்துகொண்ட பன்னீருக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தினர்.
தேவர் சமுதாயம்
அதேபோல, DNT (சீர்மரபினர் பழங்குடியினர்) சான்றிதழ் பிரச்னை காரணமாக, தேவர் சமுதாய மக்களும் பன்னீர் மீது அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் எனில் அ.ம.மு.க வேட்பாளராக நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த முத்துசாமி களமிறக்கப்பட்டுள்ளார். அவர், நாயக்கர் சமூக வாக்குகள் பிரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே வழக்கமாக அதிகமாக விழும் நாயக்கர் சமுதாய ஓட்டுக்கும் குறைய வாய்ப்பு உள்ளது.
எப்படி வெற்றி
மேற்கண்ட விஷயங்களை தனக்கு சாதகமாகக்கி கொண்டுள்ள தங்க தமிழ்ச்செல்வன் அனைத்து சமூகப் பெரியவர்களைத் தனித்தனியே சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறார். இதேபோல் தேனி அருகே உள்ள கிராமங்களில் பட்டியல் சமூக மக்களின் வாக்குகளையும் கவர அதிரடி திட்டத்தை வகுத்துள்ளார் தங்கம். இதுமட்டுமின்றி திமுக எந்தெந்த வார்டில் யாரை எப்படி வைத்து வாக்குளை பெற வியூகம் வகுத்தது என்பது தங்கத்திற்கு தெரியும் என்பதால் அதிமுக கலக்கத்தில் உள்ளது.
கடுமையாக இருக்கும்
அ.தி.மு.க தரப்பு வாக்காளர்களை கவனிப்பதை தடுக்க தங்க தமிழ்ச்செல்வன் வலுவாக ஸ்கெட்ச் போட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு பக்கம், திமுக, என்றால் மறுபக்கம் அமமுக வாக்குகளை பிரிக்கும் வாய்ப்பிருப்பதால் ஓ.பன்னீர்செல்வத்துக்குத் போடி தொகுதி தேர்தல் களம் கடுமையாக மாறி உள்ளதாகவே சொல்லப்படுகிறது. முடிவுகள் எப்படி இருக்கும் என்பது மே 2ம் தேதி தெரிந்துவிடும்.