50 லட்சத்துடன் எஸ்கேப்பான அதிமுக ‘புள்ளி’யின் டிரைவர்! ஓ இதுதான் காரணமா? பரபர தேனி! கடுப்பான ஓபிஎஸ்!
தேனி : தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 50 லட்சம் ரூபாய் பணத்துடன் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரின் ஓட்டுநர் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த பணம் எதற்காக கொண்டு செல்லப்பட்டது யாருடைய பணம் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் உலாவுகின்றன.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த நாராயணன், அப்பகுதியில் ஆர்.ஓ.வாட்டர் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளர் என்பதோடு, ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினருக்கும் மிகவும் நெருக்கமானவர்.
அதுமட்டுமல்லாமல் அதிமுகவில் தேனி இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறையின் தேனி மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார் என்பது குறிபிடத்தக்கது. இவரது கார் ஓட்டுனர் தான் தற்போது பணத்துடன் மாயமாகியுள்ளார்.

50 லட்சத்துடன் மாயம்
நாராயணனின் கார் ஓட்டுனராக பெரியகுளம் வடகதிரை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் உசிலம்பட்டியில் இருந்து ஸ்ரீதர் மற்றும் நாராயணன் நண்பர் ஒருவரின் 50 லட்சம் ரூபாய் பணத்துடன் தேனிக்கு வந்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆண்டிப்பட்டியில் நாராயணன் காரில் உள்ள 50 லட்சம் பணத்தை தனது வீட்டில் கொடுக்குமாறு கூறிவிட்டு தேனி மாவட்ட அதிமுக செயலாளரான சையது கானின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

போலிசில் புகார்
இந்த நிலையில் 50 லட்சம் ரூபாய் பணத்துடன் ஸ்ரீதர் அதன் பின் வீடு செல்லவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் ஸ்ரீதர் குறித்த தகவல் கிடைக்காத நிலையில் பலத்த அதிர்ச்சிக்குள்ளான நாராயணன் இதுகுறித்து பெரியகுளம் தென்குரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடைய தனது கணவரை கடந்த சில நாட்களாக காணவில்லை எனவும் அவரது செல்போன் அனைத்து வைக்கப்பட்டுள்ளது என்றும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் அவரை கண்டுபிடித்து தரக் கூறி ஸ்ரீதரின் மனைவி கெங்கம்மாள் என்பவர் பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மனைவியும் புகார்
ஆகஸ்ட் 27 ஆம் தேதி காலையில் ஸ்ரீதர் பணத்துடன் மாயமான நிலையில் அன்று இரவே 10 மணிக்கு அவரது மனைவி பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார். ஆனால் பணத்தை திருடி சென்றதாக நாராயணன் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி தான் புகார் அளித்திருக்கிறார். தற்போது இந்த சம்பவம் நடந்து சுமார் ஒரு வாரத்திற்கும் மேல் ஆகி இருக்கும் நிலையில் எவ்வளவு நாளாக இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வரவில்லை. இதற்கு பின்னனி என்ன என விசாரித்த போது தான் அதிமுகவில் நடந்த பெரிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

பின்னணி என்ன?
கடந்த ஒரு மாத காலமாகவே தேனி மாவட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் வெளிப்படையாக வெடித்த பின் பணப்புழக்கம் சற்று அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில் முன்னால் முதலமைச்சர் ஒருவரின் நண்பரிடம் 50 லட்சம் ரூபாய் பணம் மாயமாக இருப்பது பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. அதே நேரத்தில் கொள்ளை போன பணம் 50 லட்சம் இல்லை எனவும் அதைவிட அதிகமாகவே இருக்கிறது எனவும் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. ஆனால் 50 லட்சம் ரூபாய் தான் மாயமாக இருக்கிறது என வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. எது உண்மை என்பது ஸ்ரீதர் பிடிபட்ட பிறகு தான் தெரியவரும் என்கின்றனர் காவல்துறையினர்.












Click it and Unblock the Notifications