என்ன சொல்றீங்க.. ஓபிஎஸ்-எடப்பாடி மீண்டும் இணைய சான்ஸ் இருக்கா.. கே.பாலகிருஷ்ணன் சொல்றதை பாருங்க
தேனி: ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரையும் ஒன்றுசேர்த்து வைக்க ஒரு வாய்ப்பு உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. கூட்டுத் தலைமையே தேவை என்று ஓபிஎஸ் ஒரு பக்கமும், ஒற்றைத் தலைமையே சரி என்று இபிஎஸ் மற்றொரு பக்கமும் செயல்பட்டு வருகின்றனர்.
இதனிடையே அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்த வழக்கில், ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
போதும்.. பாஜக அடாவடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைங்க.. தமிழக அரசுக்கு பாலகிருஷ்ணன் கோரிக்கை
ஓபிஎஸ் மேல்முறையீடு
இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இதனால் அதிமுக தலைமை மோதல் தொடர்ந்து நீடிக்கும் நிலை நிலவி வருகிறது.
அதேபோல் ஆதரவாளர்களுடன் ஆலோசனை, சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்கள் சந்திப்பு என்று இரு தரப்பிலும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் அதிமுக இணைப்புக்கு இப்போது வழியில்லை என்று பார்க்கப்படுகிறது.
கே.பாலகிருஷ்ணன் பேட்டி
இந்த நிலையில் தேனி மாவட்டம் போடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில், அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கொள்கை அடிப்படையிலான தகராறு கிடையாது. அவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு சுலபமாக தீர்ந்துவிடும் என எதிர்பார்க்க முடியாது.
பாஜக ஆதரவு
ஆனாலும் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதில் எந்தவித முரண்பாடும் இல்லாமல் செயல்படுகின்றனர். மாநில அரசின் உரிமைகள் பறிபோகும்போது எதிர்க்கட்சியின் முக்கியத் தலைவர்களாக இருவரும் குரல் கொடுக்க வேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்வதில்லை.
பிரதமர் மோடி
அதிகாரப் போட்டி, பண பலம் ஆகியவற்றால் அவர்களுக்குள் இந்த மோதல் வெடித்துள்ளது. பிரதமர் மோடி நினைத்தால் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வத்தை ஒன்று சேர்த்து வைத்தாலும் வைக்கலாம். அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இருந்தபோதும் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அக்கட்சியின் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர் என்று தெரிவித்தார்.
ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதால் தான் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என்று ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் மீண்டும் பாஜக தலையிட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.