ஒரே நாள் இரவில் வீடு வீடாக ரூ.120 கோடி பட்டுவாடா.. பரபரக்கும் தேனி
Recommended Video
சென்னை: விஐபி தொகுதியான தேனியில் விடிய விடிய வாக்காளர்கள் தூக்கம் கெடுத்து விழித்திருக்கிறார்கள். வேறு எதற்கு.. எல்லாம் 'விட்டமின் பி' பாய்ந்தோடுவதால்தானாம்.
தேனி லோக்சபா தொகுதியில், அதிமுக சார்பில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன், ரவீந்திரநாத்குமார், காங்கிரஸ் சார்பில் அக்கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகின்றனர்.
மூவருமே பிரசித்தி பெற்ற வேட்பாளர்கள் என்பதால், தேனி லோக்சபா தொகுதி விஐபி தொகுதியாக மாறியுள்ளது. இதனால் தொகுதிக்குள் பணம் ஆறாக ஓடுகிறதாம்.
அந்த எழவுக்காகவாவது இந்த திமுக, அதிமுக பண்ணி தொலைச்சிருக்க கூடாதா?.. காளியம்மாள் ஆவேசம்
பணம் செழிப்பு அடேங்கப்பா
தேனி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியிலும் இடைத் தேர்தல் நடைபெறுவதால், அதற்கும் சேர்த்து பணம் கொட்டுகிறதாம். ஆனால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணிப்பதால், இரவு நேரத்தில்தான், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. எனவே வாக்காளர்களால் நிம்மதியாக தூங்க முடியவில்லையாம்.
தூங்கிடக்கூடாதே ஆண்டவா
இரவு எந்த கட்சிக்காரராவது பணத்தோடு வந்து கதவை தட்டி, அந்த நேரம் பார்த்து நாம் அசந்து தூங்கிவிட்டால், கிடைக்கும் பணம் கிடைக்காமல் போய்விடுமே என்ற தர்ம சங்கடத்தில் பல வாக்காளர்கள் உள்ளனர். இதனால், இரவு பலரும் தூங்குவதில்லை. சில வீடுகளில், ஷிப்ட் போட்டு முழித்து இருக்கிறார்களாம்.
ஓட்டுக்கு ஆயிரம்
இந்த நிலையில், நேற்று இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணிக்குள், ஒரு முக்கிய கட்சி நிர்வாகிகள், வீடு வீடாக சென்று பணப்பட்டுவாடாவை முடித்துவிட்டார்களாம். ஓட்டுக்கு 1000 ரூபாய் என வழங்கப்பட்டுள்ளது. மொத்தம், 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய தேனி லோக்சபா தொகுதியில் 9 மணி நேரத்தில் சப்ளை செய்யப்பட்ட பணம் 120 கோடி ரூபாய் என்கிறார்கள். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போல 9 மணி நேரத்தில் மொத்த லோக்சபா தொகுதியையும் கவர் செய்துள்ளனர் என்று ஆச்சரியப்படுகிறார்கள் பிற கட்சியினர்.
பல கட்சிகள்
அந்த கட்சியே ரூ.1000 என்றால், எதிர்த்து நிற்கும் 'டோக்கன் கட்சி' இன்னும் அள்ளி வீசுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இன்று இரவும் தூங்கிவிடக் கூடாது என சூளுரை எடுத்துள்ளனராம் சில பொது ஜனங்கள். நேற்றும் தூக்கம் போச்சி, இன்றும் இருக்காது. நாளையும் அப்படித்தான் என்று புலம்புகிறார்கள் தேனி தொகுதி வாக்காள பெருமக்கள்.