கோவை கார் வெடிப்பு: என்ஐஏ விசாரணைக்கு முதல்வர் பரிந்துரைத்த பின்னணியில் பலே பிளான்! சொல்வது எச்.ராஜா
தேனி: கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒப்படைத்தது ஒரு நாடகம் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 23-ம் தேதி அதிகாலை ஒரு காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.
இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஜமேஷா முபின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். இதில் பல கிலோ எடைக்கொண்ட வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. மேலும், 2019-ம் ஆண்டு என்ஐஏ அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, அவருடன் தொடர்பில் இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கு என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் நாடகம்..
இந்நிலையில், தேனிக்கு வந்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்ததார். அப்போது கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "கோவை கார் வெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதற்கு பின்னால் ஓட்டு வங்கி அரசியல் காரணமாக இருக்கலாம். அப்போதுதானே, அவர்களை நாங்கள் கைது செய்யவில்லை.. மத்திய அரசு தான் கைது செய்தது என்று சொல்ல முடியும். இதன் காரணமாகவே, முதல்வர் மு.க. ஸ்டாலின் என்ஐஏ விசாரணை கோரி இருக்கலாம். என்ஐஏவிடம் இந்த வழக்கை தமிழக அரசு ஒப்படைத்தது ஒரு நாடகம் ஆகும். அதே சமயத்தில், என்ஐஏ இந்த வழக்கை விசாரிப்பதால் அதன் நடவடிக்கைகள் சரியாக இருக்கும் என நம்புகிறேன்" என்றார்.

திருமாவளவன் தீயசக்தி..
இதன் தொடர்ச்சியாக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெற வேண்டும் திமுக கூறி வருவது குறித்து எச். ராஜாவிடம் கேள்வியெழுப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது: நினைத்தால் நியமிப்பதற்கும், நினைத்தால் நீக்குவதற்கும் ஆளுநர் என்ன வீட்டு வேலைக்காரரா.. ஆளுநரை திரும்பப் பெறக் கூறுவதெல்லாம் சுத்த கோமாளித்தனம். இதுதொடர்பாக திருமாவளவன் போன்ற சிறிய கட்சியை வைத்திருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். திருமாவளவன் ஒரு தீய சக்தி, பிரிவினைவாதி. ஆனால் திமுகவில் உள்ளவர்கள் ஆளுநரை திரும்பப்பெறக் கூறுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. ஆளுநரை மாற்றக் கூறுவது தவறானது. இப்படி பேசுவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

'சீமான் ஒரு கோமாளி..'
தமிழகத்தில் பிற மாநிலத்தவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கக்கூடாது என நாம் தமிழர் கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருகிறார். பிரபாகரன் தனக்கு ஆமைக்கறியை ஊட்டிவிட்ட கூறும் ஒரு கோமாளிதான் சீமான். அவரே முதலில் ஒரு தமிழர் கிடையாது. தமிழர்களை பற்றி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு ஓட்டுரிமை வழங்கக்கூடாது என சீமான சொல்வாரா? அவரே வேறு மாநிலத்தில் இருந்து வந்தவர்தான்.

ஆஎஸ்எஸ் பேரணி - காவல்துறை தந்திரம்..
நவம்பர் 6-ம் தேதி தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியும், தமிழக காவல்துறை தந்திரமாக செயல்பட்டு ஒருசில இடங்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்ததை எதிர்த்தவர் திருமாவளன். தீவிரவாதி யாசின் மாலிக்கை ஆதரித்தவர் சீமான். இவர்கள் நடத்திய மனித சங்கிலிக்கு உளவுத்துறை அனுமதியை அரசு பெறவில்லை. ஆனால் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு மட்டும் தடை விதித்திருப்பது தமிழக அரசின் பாரபட்சமான நடவடிக்கையை காட்டுகிறது. இவ்வாறு எச். ராஜா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications