47 மணி நேர போராட்டம்! கல்குவாரி விபத்தில் சிக்கிய 4வது நபர் சடலமாக மீட்பு! மேலும் இருவரின் கதி என்ன?
நெல்லை : நெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில் சிக்கிய 4வது நபரை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 47 மணி நேர மீட்பு பணிக்கு பிறகு இடிபாடுகளில் இருந்து சடலமாக மீட்டனர்.
Recommended Video
நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே அடை மிதிப்பான் குளத்தில் கல் குவாரியில் நேற்று முன்தினம் இரவு 400 அடி ஆழத்தில் கற்களை ஏற்றிக்கொண்டிருந்தபோது ராட்சத பாறை உருண்டு விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த 6 தொழிலாளர்கள் பாறைகளின் இடிபாடுகளில் சிக்கினர்.
மேலும் அங்கு நின்ற லாரி மற்றும் பொக்லைன் எந்திரங்களும் இடிபாடுகளில் சிக்கியது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று கயிறு மூலம் குவாரிக்குள் இயங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
300 அடி பள்ளம்.. நெல்லை கல்குவாரியில் ஏற்பட்ட பயங்கர விபத்து.. மீட்பு பணி தீவிரம்.. என்ன நடந்தது?
கல்குவாரி விபத்து
அப்போது இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் , நாட்டார்குளத்தை சேர்ந்த விஜய் ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் சுமார் 17 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இளையநயினார் குளத்தை சேர்ந்த செல்வம் என்பவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பேரிடர் மீட்புக்குழு
இதற்கிடையே பாறை சரிவில் சிக்கிய காக்கைகுளத்தை சேர்ந்த செல்வகுமார் , தச்சநல்லூர் ஊருடையான்குளத்தை சேர்ந்த ராஜேந்திரன், ஆயன்குளத்தை சேர்ந்த மற்றொரு முருகன் ஆகிய மேலும் 3 பேர் கதி என்ன? என்று தெரியவில்லை. சுமார் 400 அடி ஆழத்தில் சிக்கி இருப்பதால் அவர்களை மீட்க அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 30 பேர் வரவழைக்கப்பட்டனர். நேற்று நள்ளிரவு சம்பவ இடத்திற்கு வந்தடைந்த அந்த குழு குவாரியை முழுமையாக ஆய்வு செய்தது.
மீட்பு பணியில் சிக்கல்
2வது நாளாக நடைபெறும் இந்த மீட்பு பணியில் தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினரும் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் பலனாக இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 தொழிலாளர்களில் ஒருவரை மட்டும் காண முடிந்தது. ஆனால் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த அவரையும் மீட்க முடியாமல் இருந்தது. இந்நிலையில் இன்றும் மீட்பு பணிகள் நடைபெற்ற போதே 2 முறை பாறைகள் சரிந்து விழுந்தது. இதனால் குவாரியில் சுமார் 400 அடி ஆழத்தில் சிக்கி உள்ள 3 தொழிலாளர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
4வது நபர் சடலமாக மீட்பு
இதுவரை 3 தொழிலாளர்களும் மீட்கப்படாததால் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கவலை அடைந்த நிலையில், விபத்தில் சிக்கிய 4வது நபரை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 47 மணி நேர மீட்பு பணிக்கு பிறகு இடிபாடுகளில் இருந்து சடலமாக மீட்டனர். பாறைகள் நசுக்கியதில் அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்தது. இதனால் அவரை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் நான்காவதாக சடலமாக மீட்கப்பட்டவர் பெயர் முருகன் என்பதும், நாங்குநேரி அருகே உள்ள ஆயர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.