நோட் திஸ் பாயிண்ட்.. “தற்போது வரை” அதிமுகவோடு கூட்டணி! அண்ணாமலை வாட்ச் பற்றி “கப்சிப்” -பாஜக நயினார்
திருநெல்வேலி: தற்போது வரை அதிமுக கூட்டணியில் பாஜக நீடிப்பதாகவும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறோமா என்பது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழு முடிவு செய்யும் எனவும் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.
திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலத்துக்கு சென்று ஆலோசனை மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை நேரில் சந்தித்த நயினார் நாகேந்திரன் தனது தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

கால்வாய் பணிகள்
அப்போது திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள திருநெல்வேலி கால்வாய், கோடகன் கால்வாய் ஆகியவற்றை மேம்படுத்துவது, கால்வாய்களில் லைனிங் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு அரசின் சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட ஆட்சியரிடம் மனு
அத்துடன் திருநெல்வேலி கங்கைகொண்டானை அடுத்த அலவந்தான் குளம் முதல் ராஜபதி வரை எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மேய்ச்சல் நிலமாக இருக்கக்கூடிய 600 ஏக்கரை சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்பதற்காக கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மக்கள் போராடி வரும் நிலையில் அவர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியிடம் நயினார் நாகேந்திர மனு அளித்தார்.

அதிமுக கூட்டணியில் உள்ளோம்
அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "திருநெல்வேலி தொகுதிக்கு உட்பட்ட கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் நிதி குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், "தற்போது வரை அதிமுக கூட்டணியிலேயே நீடிக்கிறோம்.

திமுகவுடன் கூட்டணியா?
லோக் சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர்கிறோமா என்பது குறித்து எங்களது கட்சியின் நாடாளுமன்ற குழு கூடி முடிவு செய்யும். சிவி சண்முகம் போன்ற 2 ஆம் கட்ட தலைவர்களின் பேச்சு அவர்களின் சொந்த கருத்து. அதனை கட்சியின் கருத்தாக ஏற்றுக் கொள்ள முடியாது. பாரதிய ஜனதா கட்சி திமுகவுடன் கூட்டணி அமைக்க உள்ளது என்று அவர் எவ்வாறு கூற முடியும்?

அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச்
பாஜக மாநில தலைவரோடு மூத்த நிர்வாகிகள் தலைவர்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. வரும் ஏப்ரல் மாதம் அண்ணாமலை தொடங்க இருக்கும் யாத்திரையில் நான் கலந்து கொள்வேன்." என்று அவர் தெரிவித்தார். அவரிடம் அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனை கேட்ட நயினார் நாகேந்திரன் எந்த பதிலும் அளிக்காமல் வணக்கம் என்று மட்டும் தெரிவித்துவிட்டு பேட்டியை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

சிவி சண்முகம் என்ன சொன்னா?
கடந்த சில நாட்களுக்கு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கும் என்றது விவாதப் பொருளாக மாறியது. இது குறித்து விளக்கமளித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சிவி சண்முகத்தை 3 ஆம் கட்டத் தலைவர் என்று பேசி இருந்தார். இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் அவரை 2 ஆம் கட்டத் தலைவர் என்று பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications