"இப்போ சந்தோசமா.." பழங்குடி மாணவிக்கு கனிமொழியிடமிருந்து வந்த சர்ப்ரைஸ் கால்.. நெகிழ வைத்த சம்பவம்
தென்காசி: தென்காசியில் ஜாதி சான்றிதழ் கிடைக்காமல், கல்லூரி செல்ல முடியாமல் தவித்து வந்த மாணவிக்கு திமுக எம்பி கனிமொழி கல்லூரியில் இடம் கிடைக்க உதவி செய்துள்ளார். அதோடு அவருக்கு நேரடியாக போன் செய்து நம்பிக்கை தரும் விதமாக பேசி இருக்கிறார் கனிமொழி எம்பி.
தென்காசி அருகே ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் பழங்குடி பிரிவை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதில் பல வருடமாக சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் பழங்குடி பிரிவு மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகளும் இவருக்கு மறுக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில்தான் பள்ளி முடித்து இந்த வருடம் கல்லூரி சேரும் வாய்ப்பையும் அவர் இழக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஜாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் கல்லூரியில் இவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எந்த கல்லூரியிலும் சேர முடியாமல் அவதிப்பட்டு வந்த விஜயலட்சுமி குறித்த செய்தி ஊடகங்களில் வெளியானது.

உதவி
இந்த செய்தி அறிந்ததும் திமுக எம்பி கனிமொழி விஜயலட்சுமிக்கு உதவி செய்து உள்ளார். விஜயலட்சுமியின் விவரங்கள், பள்ளி சான்றிதழ்கள் ஆகியவற்றை கனிமொழி பெற்றுள்ளார். அதோடு மறுநாளே திமுக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் மகனுக்கு சொந்தமான தனியார் கல்லூரியில் உடனே சீட்டும் வாங்கி கொடுத்துள்ளார். மாணவியின் கஷ்டமான நிலையை உணர்ந்த கனிமொழி உடனடியாக அந்த பெண்ணுக்கு சீட் வாங்கிக்கொடுத்துள்ளார்.

ஆட்சியர்
அதுமட்டுமின்றி தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு போன் செய்த கனிமொழி, உடனடியாக அந்த மாணவிக்கு சாதி சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஒரு மாதத்திற்குள் அந்த மாணவிக்கு சாதி சான்றிதழ் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாணவிக்கு கல்லூரியில் இடம் வாங்கிக்கொடுத்தது மட்டுமின்றி நேரடியாக அவருக்கு சர்ப்ரைஸாக போன் செய்தும் கனிமொழி ஊக்கம் அளித்துள்ளார்.

கனிமொழி போன்
அந்த மாணவிக்கு போன் செய்த கனிமொழி எம்பி, உங்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்ற செய்தியை பார்த்தேன். இது தொடர்பாக பேசி இருக்கிறேன். உங்களுடைய அப்பாவிடமும் பேசினேன். உங்கள் நிலை புரிகிறது. உங்களுக்கு தனியார் கல்லூரியில் சீட் ஏற்பாடு செய்து இருக்கிறேன். கண்டிப்பாக சீட் தருவேன் என்று கூறி உள்ளார்கள்.. இப்போது உங்களுக்கு சந்தோசமா?

படியுங்கள்
நன்றாக படியுங்கள்.. கவலைப்பட வேண்டாம்.. நம்பிக்கையாக இருங்கள் என்று கனிமொழி எம்பி அந்த மாணவிக்கு நம்பிக்கை அளித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவி ரொம்ப நன்றி மேடம் என்று கூறி கனிமொழிக்கு நன்றி தெரிவித்துள்ளார். சாதி சான்றிதழ் காரணமாக மாணவி ஒருவரின் மேல்படிப்பு தடை பட்ட நிலையில் கனிமொழி உரிய நேரத்தில் உதவி செய்து அந்த மாணவிக்கு கல்லூரியில் இடம் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications