இலவச அரசு பஸ்ஸில் ஏறிய 2 பெண்கள்! திருநெல்வேலி விடியல் பயணத்தில் டிக்கெட் இருந்தும் இப்படியாயிடுச்சே
திருநெல்வேலி: திருநெல்வேலியில் மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் இலவசமாக பயணித்த பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.. உண்மையிலேயே நெல்லை அரசு பஸ்ஸில் என்ன நடந்தது? இலவச பேருந்தில் சம்பந்தப்பட்ட 2 பெண்களுக்கு அபராதம் ஏன் விதிக்க வேண்டும்? இதுகுறித்து பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை என்ன? இவைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
கடந்த 2021ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றவுடன் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக நகரப் பேருந்துகளில் இலவச பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது... முதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்தே இந்த இலவச பஸ்ஸுக்குதான்..

இலவச அரசு பஸ் பயணம்
இதனால் இந்த அறிவிப்பு பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.. ஏராளமான பெண்களுக்கு இன்றுவரை உதவியாகவும், வசதியாகவும் இருந்து வருகிறது..
ஆனால், எதிர்க்கட்சிகளால் அதிகளவு விமர்சனம் எழுந்ததும் இந்த திட்டத்திற்குதான்.. கஜானாவில் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு, தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் இந்த திட்டத்தை ஏன் திமுக கொண்டு வர வேண்டும் ? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின..
அதேபோல, இந்த இலவச பயணம் தொடர்பான சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன.. இதற்கு காரணம், திமுக அமைச்சர்களின் ஓசி பயணம் உள்ளிட்ட சர்ச்சை பேச்சுகள்தான்..
மகளிர் இலவச பேருந்து
இந்நிலையில், நெல்லையில் புது விவகாரம் வெடித்துள்ளது... டவுன் பகுதியில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்டுக்கு சென்ற அரசுப் பேருந்தில் நடந்த ஒரு நிகழ்வு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
அதாவது, சம்பவத்தன்று அரசு பஸ், புதிய பேருந்து நிலையத்தை அடைந்ததும், அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர்கள் பயணிகளிடம் சோதனை நடத்தி உள்ளனர்.. அப்போது பஸ்ஸில் இருந்து இறங்கிய இரண்டு பெண் பயணிகளிடம் டிக்கெட் இல்லை என்பது தெரியவந்தது.
மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றாலும், கணக்கீட்டு பணிகளுக்காக கண்டக்டர் வழங்கும் பூஜ்ஜிய மதிப்புள்ள பயணச்சீட்டு அதாவது ஜீரோ டிக்கெட்டுகளை பெண்கள் வைத்திருக்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால், அந்தப் பெண்கள் இருவரும் டிக்கெட் வைத்திருக்காததால், அவர்கள் இருவருக்கும் தலா 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி - 2 பெண்கள்
இது பஸ்ஸில் இருந்த மற்ற பயணிகளுக்கும் அதிர்ச்சியை தந்தது.. பிறகு பாதிக்கப்பட்ட பெண்களிடம் கேட்டபோது ஒரு முக்கிய நடைமுறைச் சிக்கல் வெளிச்சத்திற்கு வந்தது.
பொதுவாக பஸ்களில் கண்டக்டர்கள் 3 அல்லது 4 பெண்கள் ஒன்றாக ஏறும்போது, அவர்கள் அனைவருக்கும் சேர்த்து ஒரே டிக்கெட்டாக தந்துவிடுகிறார்களாம்.. அப்படி கூட்டாக பயணிக்கும்போது டிக்கெட்டை கையில் வைத்திருக்கும் பெண், அவரது பஸ் ஸ்டாப் வந்ததுமே இறங்கி சென்றுவிடுகிறார். இதனால் மற்ற பெண்களிடம் அந்த நேரத்தில் டிக்கெட் இருப்பதில்லை.
இப்படியான குளறுபடியால்தான் அந்த 2 இரு பெண்களிடமும் டிக்கெட் இல்லாமல் போயிருக்கிறது. இது குறித்து அந்தப் பெண்கள் டிக்கெட் பரிசோதகர்களிடம் விரிவாக விளக்கியும், அவர்கள் அதை ஏற்காமல் அபராதம் வசூலிப்பதிலேயே குறியாக இருந்தார்களாம்..
இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பெண் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் தங்களுக்கு வரவில்லை.. இருந்தாலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துநர் மற்றும் டிக்கெட் பரிசோதகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது..
நெல்லை அதிகாரிகள்
இலவச பயணம் என்றாலும் பயணிகள் கட்டாயம் டிக்கெட் வைத்திருக்க வேண்டும், கண்டக்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக டிக்கெட் வழங்க வேண்டும் என்பதும் விதியாகும். எனினும், டிக்கெட் இல்லாத பெண்களிடம் அபராதம் வசூலித்திருக்க வேண்டிய அவசியமில்லை.. அவர்களை எச்சரித்து அட்வைஸ் தந்து அனுப்பியிருக்கலாம்.. இதுபோன்ற குளறுபடிகள் இனி நிகழாமல் இருக்க ஊழியர்களுக்குத் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது." என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் சோஷியல் மீடியாவிலும் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது.. இதையடுத்து இலவச பேருந்து பயணத்தில் டிக்கெட் பெறுவதில் இருக்கும் இத்தகைய நடைமுறைச் சிக்கல்களை சரிசெய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்..!!












Click it and Unblock the Notifications