இரவில் நடக்க வேண்டாம்...திருச்செந்தூர் பாதையாத்திரை செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாநகர கிழக்கு துணை ஆணையர் சுரேஷ் குமார்
திருநெல்வேலி: இரவு ஊரடங்கு அமலாவதால் திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இரவு 10 மணிக்கு மேல் பாதயாத்திரை செல்வதை தவிர்க்க வேண்டும் என்று நெல்லை மாநகர கிழக்கு துணை ஆணையர் சுரேஷ் குமார் கூறியுள்ளார். கொரனோ பரவலை தடுக்க அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரனோ மூன்றாம் அலை மற்றும் ஓமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது.
நாளை முதல் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட உத்தரவும் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கடும் நடவடிக்கை
நெல்லை மாநகரில் இன்று முதல் கொரனோ பரவல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதையொட்டி ஓட்டல்கள், திரையரங்குகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் கொரனோ தடுப்பு வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. செய்தியாளர்களிடம் பேசிய மாநகர கிழக்கு துணை ஆணையர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

ஊர் சுற்ற வேண்டாம்
மருந்து கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும். அதற்காக மருத்து சீட்டுகளை காட்டி, தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். ஊரடங்கில் விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வார இறுதியில் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அத்தியாவிச பணிகளை தவிர அனைத்து விஷயங்களுக்கும் பொதுமக்கள் அந்த நேரத்தில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

ஒத்துழைப்பு கொடுங்கள்
பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் முன்னதாகவே தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.அதேபோல் இரவு ஊரடங்கு என்பதால் திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் முடிந்தளவு இரவு 10 மணிக்கு மேல் பாதயாத்திரை செல்வதை தவிர்த்து, கொரனோ பரவலை தடுக்க அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

5000 பேர் மீது வழக்கு
வணிக நிறுவனங்கள் சானிடைசர் பயன்படுத்துவது உள்ளிட்ட கொரனோ விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். இரவு 10 மணிக்கு ஊரடங்கு தொடங்குவதால் அதற்கு முன்பாகவே வியாபாரிகள் கடைகளை அடைக்க வேண்டும். இரவு 10 மணிக்கு பிறகு எந்தவித நகர்வும் இருக்கக் கூடாது. கடந்த ஒருவாரமாகவே நெல்லை மாநகரில் சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிவதை கண்காணித்து வருகிறோம். ஒரு வாரத்தில் விதியை மீறிய 5000 பேர் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகம் பேர் முகக்கவசம் அணிகின்றனர். இதனால் கொரனோ பரவல் குறையும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications