பெண்களுக்கு இலவச பயணம் அரசு வழங்குவது தேவையற்றது: அதிர்ச்சிக்கொடுத்த சீமான்
நெல்லை: பெண்களுக்கு பஸ்களில் இலவச பயணம் அரசு வழங்குவது தேவையற்றது என்று நாம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பெண்கள் கூறி வரும் நிலையில் சீமான் இவ்வாறு கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக நெல்லையில் நிருபர்களிடம் பேட்டியளித்த சீமான் கூறியதாவது:- ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம் .

வரவேற்கிறோம்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படும். இலங்கை தமிழர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களை தமிழக அரசு மூட வேண்டும். இந்த சிறப்பு முகாம்களை அமைத்தது முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். 110 விதியின் கீழ் இலங்கை தமிழர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திட்டங்கள் கால தாமதமானது. இருப்பினும் அதனை வரவேற்கிறோம்.

அழுத்தம் கொடுக்க வேண்டும்
காங்கிரஸ், பா.ஜ.க தலைமையில் அமைந்த அரசுகள் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மறுக்கிறது. திபெத் மக்களுக்கு பல சலுகைகள் வழங்குகிறார்கள். இலங்கை தமிழர்களை சட்டத்திற்கு புறம்பாக குடியேறினார்கள் என சொல்கிறார்கள். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமையை பெற்று தர வேண்டும்.

போராட்டத்துக்கு அனுமதி இல்லை
பள்ளிகள் திறப்பு மூலம் மக்களை சரசரி வாழ்கைக்கு கொண்டுவர அரசு முயற்சிக்கிறது. ஊரடங்கை மக்கள் விரும்பவில்லை.நோயை விட முடக்கம் என்பது மக்களை மிகவும் பாதிக்கிறது. நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆதரித்தது திமுக. நீட்டுக்காக மக்கள் போராட்டம் கிளர்ச்சி ஏற்பட்டதற்காக திமுக அதனை எதிர்க்க தொடங்கியது. நீட் தொடர்பாக தமிழகத்தில் நாங்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை. திராவிட கட்சிகளின் ஆட்சி மக்களை ஏமாற்ற மட்டுமே செய்கிறது.

பெண்களுக்கு இலவச பயணம்
அரசியல் தலைவர்களின் படங்கள் கல்வி புத்தகங்களிலும் கைகளிலும் இடம்பெறுவது தேவையற்றது. முன்னாள் முதல்வர்கள் படங்கள் இருப்பதை எடுக்க வேண்டாம் என முதல்வர் கூறியிருப்பது அரசியல் நாகரிகத்தை காட்டுகிறது. இவ்வாறு சீமான் கூறினார். மேலும் கூறிய சீமான் பெண்களுக்கு அரசு நகர பஸ்களில் இலவச பயணம் அரசு வழங்குவது தேவையற்றது.

கட்டணம் குறைக்கலாம்
பஸ்களில் கட்டண குறைப்பு செய்யலாம். ஆனால் இலவச பயணம் என்பது தேவையில்லை. 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன் என சொல்லும் அரசு எப்படி கடனானது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தினார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபோது அவர் கையெழுத்திட்ட முதல் 5 திட்டங்களில் நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்பதும் ஒன்றாகும்.

பெண்களுக்கு அதிர்ச்சி
இந்த திட்டத்துக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இலவச பஸ் பயணத்தால் ஒரு நாளைக்கு வேலைக்குச் செல்லும் கிராமத்துப்பெண்கள் ரூ.40 வரை மிச்சமாவதாக கூறுகிறார்கள். இப்படி கணக்கு போட்டு பார்த்தால் வேலைக்கு செல்லும் கிராமத்து பெண்களுக்கு மாதம் ரூ.1,200 வரை மிச்சமாகிறது. இதை பலரும் வரவேற்ற நிலையில் சீமான் இப்படி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications