திமுகவின் கடைசி ஆட்சி காலம், இனிமேல் திராவிடத்திற்கு தமிழ்நாட்டில் வேலையில்லை.. அண்ணாமலை பேச்சு
நெல்லை : இதுவே திமுகவின் கடைசி ஆட்சி காலம், இனிமேல் திராவிடத்திற்கு தமிழ்நாட்டில் வேலையில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நெல்லை மற்றும் சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசும் போது திமுகவின் கடைசி ஆட்சி காலம் இதுதான் என்று விமர்சித்தார். வரும் காலம் பாரதிய ஜனதா கட்சிக்கான காலம் என்றும் தெரிவித்தார்.
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150 -வது பிறந்தநாள் விழா செப்டம்பர் 5ம்தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நெல்லை டவுணில் உள்ள அவரது மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை , மற்றும் நெல்லை சட்டமன்ற உறுப்பினரும் , மாநில துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் . இதனைத் தொடர்ந்து சிதம்பரனாரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக மணிமண்டபத்திற்கு வெளிப்பகுதியில் கேக் வெட்டி அவரது படத்தை திறந்து வைத்தனர் .

வஉசி பிறந்த நாள்
இதனை அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இது சரித்திர நாள் , சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ.சியின் 150 -வது பிறந்தநாள் விழா நாடுமுழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. வ.உ.சிதம்பரபிள்ளை ஒரு சாதாரண மனிதர் கிடையாது. பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல் விட்ட ஒரு சாதனை நாயகன் ஆவார் . இன்று அவர் புகழ் நாடு முழுவதும் பரவி உள்ளது.

1லட்சம் சிலைகள்
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி கொடுக்கமால் தமிழக அரசு முரட்டு பிடிவாதமாக இருக்க காரணம் என்ன என்று தெரியவில்லை. பாரதிய ஜனதா தொண்டர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 முதல் 12 ந்தேதி வரை 3 நாட்கள் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை வீடுகள் முன் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவார்கள் .

ஏற்றுக்கொள்ள முடியாது
இது தனிமனித உரிமை. இதனைத் தடுக்க யாருக்கும் அனுமதியில்லை . மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி போல் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கட்டுபாடுகளுடன் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும், ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு முதல்வர் , அமைச்சர்கள் அதிகாரிகள் முடிவு செய்யக்கூடாது ஜனநாயக முறையில் இதனை ஏற்று கொள்ள முடியாது, இன்னும் காலம் கடக்கவில்லை, வழிபட நடத்த அனுமதிக்கலாம் .

தேர்தல் ஆணையம்
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டது தொடர்பாக நாளை தேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது, அதில் பாஜகவும் கலந்து கொள்கிறது கூட்டத்தின் நிறைவுக்கு பின் இது குறித்து முடிவு செய்யப்படும் . மாநில அரசு பாரதியார், வ.உ.சி போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவிப்பதை பாஜக வரவேற்கிறது .

அரசியல் தலைவர்கள்
கொடநாடு விவகாரத்தை பொறுத்தவரை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தேவையில்லாமல் சிக்க வைப்பதற்கான, தனி மனித தாக்குதல் நடந்து வருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அரசியல் தலைவர்களை பொய்யாக வழக்குகளில் சேர்ப்பதை, பாரதிய ஜனதா வன்மையாக கண்டிக்கின்றது. இந்த வழக்கில் பாரபட்சம் இல்லாமல் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்.

திராவிடத்திற்கு வேலையில்லை
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 400 தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழகத்தில் பாஜகவிற்கான இடம் உருவாகி விட்டது. அடுத்து தமிழகத்தில் பாஜகவா, திமுகவா என்று யோசிக்கும் நிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள். அதிமுகவுடன் எந்த குழப்பமும் இல்லாமல் கூட்டணி செல்கின்றது. வரும் காலம் பாரதிய ஜனதா கட்சிக்கான காலம். இதுவே திமுகவின் கடைசி ஆட்சி காலம். இனிமேல் திராவிடத்திற்கு தமிழ்நாட்டில் வேலையில்லை என்றார்

அண்ணாமலை உறுதி
சிவகாசியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசும் போது பட்டாசு தொழில் மேம்படுத்துவதற்கு, மத்திய அரசு எப்பொழுதும் துணை நிற்கும். கொரோனோ காரணமாக மட்டுமே பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு தொழிலாளர்களை பாதிக்கும் எந்த முடிவையும் மத்திய அரசு மேற்கொள்ளாது என்று உறுதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications