ரேஷன் கடைகளில் தரமான அரிசி.. இல்லாட்டி அவ்ளோதான்..அமைச்சர் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..
நெல்லை: ரேஷன் கடைகளில் கருப்பு மற்றும் பழுப்பு அரிசிகளை பொதுமக்களுக்கு வழங்ககூடாது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு துறை அதிகாரிகளுடன் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது
ஆபாச வீடியோ மூலம் மாதம் 7 லட்சம் வருமானம்.. 2 சொகுசு கார்கள், 2 பங்களாக்களை குவித்த பப்ஜி மதன்!
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன் ,அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் மற்றும் நான்கு மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். தற்போதுள்ள சூழலில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கடன்கள் குறித்தும் விவசாய தேவைக்கான உரம் விளைபொருட்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பயிர்க்கடன்
இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி கூறியதாவது:-கொரோனா காலத்தை சமாளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அனைத்து துறை அதிகாரிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்கடன் வழங்கிடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
99% நிவாரண நிதி
கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கையை நடத்தி அவர்களுக்கும் கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து ரேஷன் கடைகளிலும் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை 99% வழங்கப்பட்டுள்ளது. 2-வது தவணையுடன் 2.10 கோடி மக்களுக்கு பலசரக்கு தொகுப்பு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு விளை பொருட்கள்,உரம் போன்றவை வழங்க 2000 டன்க்கு மேல் பொருட்கள் கையிருப்பு உள்ளது.
தரமான அரிசி வழங்கணும்
ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் கருப்பு மற்றும் பழுப்பு அரிசிகள் ரேஷன் கடைகளில் வழங்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது . இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கூட்டு கடன்கள் மட்டுமல்லாமல் தனி விவசாயிகளுக்கும் கடன்கள் வழங்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 11,500 கோடி விவசாய கடன் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
நெல் கொள்முதல் நிலையம்
.அரசு நெல் கொள்முதல் நிலையம் தேவையான அளவிற்கு அமைக்க அனைத்து இடங்களிலும் நடவடிக்கை எடுக்கப்படும் வெற்றிலை விவசாயிகளுக்கு விவசாய பயிர்கடன் வழங்க ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.