"பாஜகவிற்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை வைகோ மேற்கொள்வார்" துரை வைகோ
நெல்லை: வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மேற்கொள்வார் என அக்கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ நெல்லையில் பேசினார்.
நெல்லையில் மதிமுக நிர்வாகி செல்வகோபால் என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ அவரது இல்லத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
இதன்பின்னர் மதிமுக நிர்வாகி செல்வகோபாலின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர், நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
'ஆபாச அர்ச்சனை' பஞ்சாயத்து ஓவர்! அக்காடா- தம்பிடா! கூட்டாக பேட்டி தந்த பாஜக டெய்சி- திருச்சி சூர்யா!
பால் விலை உயர்வு
பால் விலை உயர்வு தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி ஆளும் கர்நாடக மாநிலத்திலும்.. கேரள மாநிலத்திலும் கூட பால் விலை உயர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புறவிலை உயர்வு உள்ளிட்டவைகள் காரணமாகவே பால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தான் தமிழகத்தில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரே கோட்பாடுடன் இருக்கிறோம்
தனிப்பட்ட இயக்கத்தின் ஊதுகோலாகவே தமிழக ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 20க்கும் மேற்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் அவர் தேவை இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தனது கடமைகளை விட்டுவிட்டு தேவையில்லாத செயல்களிலேயே தமிழக ஆளுநர் செயல்படுகிறார். 6 பேரின் விடுதலையை எதிர்த்து மறு சீராய்வு மனு செய்ய காங்கிரஸிற்கு உரிமை இருப்பதால் சென்று உள்ளார்கள். திமுக மற்றும் மதிமுக கட்சிகள் ஒரே கோட்பாடுடன் இருக்கிறோம்.
ராகுல் நடைபயணத்தில் எழுச்சி ஏற்பட்டுள்ளது
நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தில் சரியான தீர்ப்பு கிடைத்ததை போல் சீராய்வு மனு விவகாரத்திலும் நல்ல தீர்ப்பு கிடைக்கும். மதுவை ஒழிக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. தமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. ராகுல் காந்தி நடைபயணத்தில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. மதவாத சக்தியை முழு பலத்துடன் எதிர்க்க காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை நன்றாக உருவாக்க வேண்டும் என ராகுல் காந்தியிடம் நேரில் வலியுறுத்தியுள்ளேன்.
தேர்தலில் போட்டியிடுவேனா
மதிமுக பொது செயலாளர் வைகோ பல நடை பயணங்களை மேற்கொண்டு உள்ளார். மக்களிடம் எழுச்சி இருந்தது.. ஆனால் அது வாக்கு வங்கியாக மாறவில்லை... தேர்தலில் போட்டியிடுவது என்பது எனது விருப்பமில்லை.. கட்சி தலைமை வற்புறுத்தினால் கட்டாயம் தேர்தலில் போட்டியிடுவேன். 2024 இல் மதவாத சக்திகளை எதிர்த்து அனைத்து இயக்கங்களும் ஓரணியில் திரண்டால் மிகப்பெரிய பலன் கிடைக்கும்.
பாஜகவை முழு பலத்துடன் எதிர்க்க
வருகிற 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக மதவாத சக்தி பாஜகவை முழு பலத்துடன் எதிர்க்க அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிச்சயம் மேற்கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.