நெல்லையில் பயங்கரம்... பழிக்குப் பழியாக வாலிபர் படுகொலை... உறவினர்கள் சாலை மறியலால் பதற்றம்
நெல்லை : நெல்லை தச்சநல்லூரில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில், உடலை எடுக்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
நெல்லை தச்சநல்லூர் அடுத்த பால் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் பேச்சி ராஜா. இவருக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் தனது மனைவி மற்றும் 3 மாத கைக்குழந்தைளுடன் வசித்து வருகிறார். கட்டிட வேலைகளுக்கு தினக்கூலி அடிப்படையில் சென்று பேச்சி ராஜா தொழில் செய்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு கரையிருப்பு பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவம் ஒன்றில் இவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து வேலைக்கு சென்றபோது, தச்சநல்லூர் பைபாஸ் சாலையில் பிரான் குளம் அருகே அமைந்துள்ள சாய்பாபா கோவில் முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், பேச்சி ராஜா வந்த இருசக்கர வாகனத்தை வழிமறித்தது. பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக அவரை வெட்டி விட்டு அங்கிருந்து அந்தக் கும்பல் தப்பி சென்றது. இதில் படுகாயங்களுடன் சுருண்டு விழுந்த பேச்சி ராஜா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்
இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த உறவினர்கள், உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பேச்சி ராஜாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது, போலீஸாருக்கும், பேச்சி ராஜாவின் உறவினர்களுக்கும், ஊர் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடலை போலீசாரிடம் ஒப்படைக்க மறுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உறவினர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை
இதனைத் தொடர்ந்து நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர்கள் ஸ்ரீனிவாசன் மற்றும் அனிதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தைக்கு முயன்றனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து உறவினர்கள் தொடர்ந்து போராட்டதில் ஈடுபட்ட நிலையில், போலீசார் வழுக்கட்டாயமாக பேச்சி ராஜாவின் உடலை கைப்பற்ற முயன்றபோது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வலுக்கட்டாயமாக உடலை கைப்பற்றிய போலீசார்
இதனை தொடர்ந்து காவல்துறையினர், வலுக்கட்டாயமாக பேச்சி ராஜாவின் உடலை கைப்பற்றி, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பேச்சி ராஜாவின் உறவினர்கள், பால் கட்டளை விலக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை
இதனையடுத்து, மாநகர காவல் ஆணையாளர் அவினாஷ் குமார் தலைமையிலான போலீசார் மற்றும் கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
உறவினர்கள், ஊர் பொதுமக்கள் கோரிக்கை
உயிரிழந்த பேச்சி ராஜா உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதில், உயிரிழந்த பேச்சி ராஜா மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்கவேண்டும், பேச்சி ராஜா கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை பேச்சி ராஜா உடலை வாங்க போவதில்லை எனவும் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
பழிக்குப் பழியாக நடந்த கொலை
மாசானமூர்த்தி என்பவரின் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஜேசிபி டிரைவரான மாசானமூர்த்தி, 2020ம் ஆண்டு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தபோது கடத்திச் செல்லப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக 10 பேர் மீது ேபாலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் தற்போது படுகொலை செய்யப்பட்ட பேச்சிராஜா 9வது குற்றவாளி ஆவார். அந்த கொலை விவகாரத்தில் தற்போது பேச்சிராஜா கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.