டீசலில் கலப்படம்! தட்டிக்கேட்டால் மிரட்டல்! அதிமுக மாஜி எம்.பி. மீது செய்தியாளர்கள் புகார்!
திருவள்ளூர்: டீசலில் கலப்படம் உள்ளதாக எழுந்த புகாரை அடுத்து அது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை அதிமுக மாஜி எம்.பி. திருத்தணி அரி ஒருமையில் திட்டிய விவகாரம் தான் இப்போது பூதாகரமாகியுள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தம்பதி ஒருவர் முன்னாள் எம்.பி. திருத்தணி அரி நடத்தி வரும் பெட்ரோல் பங்க் மீது கலப்பட புகார் அளித்திருக்கிறார்கள்.
இதனால் இந்த விவகாரம் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் வரை புகார் சென்றிருக்கின்றது.

அதிமுக மாஜி எம்.பி.
கடந்த 2014 -2019 இடையேயான காலகட்டத்தில் அதிமுக சார்பில் எம்.பியாக இருந்தவர் திருத்தணி கோ.அரி. இவர் திருவள்ளூர் மாவட்டம் பாண்டூரில் இந்தியன் ஆயின் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முகவராக பெட்ரோல் பங்க் ஒன்று நடத்தி வருகிறார். இந்த பெட்ரோல் பங்கி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தம்பதி ஒருவர் தங்கள் போக்ஸ்வேகன் போலோ காருக்கு டீசல் நிரப்பியுள்ளனர்.

கார் நின்றது
இதையடுத்து அந்த பங்கில் இருந்து கார் புறப்பட்ட 2-வது கிலோ மீட்டரிலேயே நடுரோட்டில் நின்றிருக்கிறது. இதையடுத்து மெக்கானிக் உதவியுடன் காரில் ஏற்பட்ட கோளாறை ஆராயும் போது டீசல் தரமற்று கலப்படமாகியுள்ளதாக அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் அந்த பங்கிற்கு சென்ற காரின் உரிமையாளர் ஒரு பாட்டிலில் டீசலை வாங்கி பார்த்துவிட்டு இது தொடர்பாக பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கேட்டிருக்கிறார்.

செய்தி சேகரிப்பு
எங்களுக்கு எதுவும் தெரியாது நீங்கள் ஓனரை தான் கேட்கனும் என அங்கிருந்த ஊழியர்கள் கூறியதோடு, இது தொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளரான திருத்தணி அரிக்கு தகவல் அளித்திருக்கின்றனர். இந்தச் சூழலில் அதற்குள் இந்த விவகாரம் அங்கிருக்கும் உள்ளூர் செய்தியாளர்கள் கவனத்திற்கு சென்றதால் அது குறித்து செய்தி சேகரித்து பங்கை கேமரா மற்றும் செல்போன் மூலம் படம் பிடித்திருக்கின்றனர்.

பங்க் உரிமையாளர்
அப்போது அங்கு வந்த பெட்ரோல் பங்க் உரிமையாளரான அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருத்தணி அரி, அங்கிருந்த செய்தியாளர்களை மிரட்டியதோடு ஒருமையில் பேசி படம் எடுக்க விடாமல் தடுத்திருக்கிறார். இதனிடையே இந்த விவகாரம் இப்போது பூதாகரமாகியிள்ள நிலையில் அதிமுக மாஜி எம்.பி. மீது நடவடிக்கை தேவை என பாதிக்கப்பட்ட செய்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications