"ஓசில பயணம்".. பொன்முடியின் பேச்சால் பாட்டிக்குதான் செலவு.. துரைமுருகன் கலகலப்பு
திருவள்ளூர்: அரசு பேருந்தில் இலவச பயணம் குறித்து அமைச்சர் பொன்முடியின் பேச்சால் மூதாட்டிக்கு செலவு என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை மண்டலத்திற்குள்பட்ட 13 மாவட்டங்களில் உள்ள நீர் வளத் துறை அலுவலருடன் அமைச்சர் துரைமுருகன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தியிருந்தார்.
இந்த கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதால் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

தமிழகத்தில் வன்முறை
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதித்தால் தமிழகத்தில் வன்முறை ஏற்படும் என்பதால் அந்த பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற கட்சிகளும் பேரணி நடத்த அனுமதி கேட்கிறார்கள் . இவர்களுக்கும் அனுமதி அளித்தால் அது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் எந்த கட்சிக்கும் அமைப்புக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை என்றார்.

இலவச பயணம்
பின்னர் அவரிடம் பேருந்து ஒன்றில் இலவச பயணமே வேண்டாம் என கூறி நடத்துநரிடம் காசுக்கு டிக்கெட் கொடுக்க சொன்ன மூதாட்டி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில் அமைச்சர் பொன்முடியின் பேச்சால் பாட்டிக்கு செலவு ஏற்பட்டுவிட்டது என்றார்.

ஆட்சி பொறுப்பேற்று அறிவிப்பு
திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதும் மகளிருக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம் என்ற ஒன்றை அறிவித்தது. இதன் மூலம் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வரை மிச்சப்படுவதாகவும் அந்த பணத்தில் குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பதாகவும் வீட்டுச் செலவை கவனித்து கொள்வதாகவும் தெரிவித்திருந்தனர்.

அமைச்சர் பொன்முடி
இந்த நிலையில் அண்மையில் அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில் பேசிய போது இலவச பயணத்தை கொச்சைப்படுத்தும்படியாக பேசியதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த விழாவில் அமைச்சர் பொன்முடி கூறுகையில், கொரோனா நிவாரணம் 4,000 கொடுத்தார்களே வாங்கினீர்களா?

ஓசியில் பயணம்
பஸ்ஸில் தற்போது எப்படி போறீங்க, ஓசியிலதானே பயணம் செய்றீங்கள் என்றார். பொதுமக்கள் இலவச பயணத்தை கேட்காமலே அரசாங்கமே கொடுத்துவிட்டு இப்படி அசிங்கப்படுத்துவதா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இது பொதுமக்களின் வரிப்பணம் தானே, ஏதோ அமைச்சர் அவர் வீட்டு சொத்து போல் பேசுகிறாரே என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.

பேருந்தில் மூதாட்டி வாக்குவாதம்
இந்த நிலையில்தான் ஒரு மூதாட்டி, அரசு பேருந்தில் ஏறி கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டு வாக்குவாதம் செய்தார். எனக்கு ஓசியே வேண்டாம், நான் காசு கொடுக்கிறேன் டிக்கெட் கொடு அப்பறம் ஓசியில் பயணம்னு சொல்லுவீங்க என்றார். இதையடுத்து கண்டக்டர் எவ்வளோ எடுத்துக் கூறியும் மூதாட்டி பிடிவாதம் பிடித்ததால் அவர் காசுக்கு டிக்கெட் கொடுத்தார். ஆனால் இதெல்லாம் ஐடி விங்கின் ஏற்பாடு என்றும் அந்த மூதாட்டி அதிமுகவை சேர்ந்தவர் என்றும் திமுக ஐடி விங் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications