பள்ளி சென்ற முதல் நாளே இப்படியா?.. அம்மாவுக்கு டாட்டா காட்டிய குழந்தை பஸ் சக்கரத்தில் சிக்கி பலி!
திருவண்ணாமலை: செய்யாறு அருகே பள்ளியில் சேர்ந்த முதல் நாளே பள்ளி வாகனத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்திற்கு உட்பட்ட ஆரணி அருகே உள்ள கொருக்காத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நெசவு தொழிலாளி ஜோதி-ராணி தம்பதியர். இவர்களுக்கு விக்னேஷ், சர்வேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இதில் சர்வேஷை (4) ஆரணி அருகே உள்ள வாழைபந்தல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி வகுப்பில் அட்மிஷன் போட்டிருந்தனர்.

பௌர்ணமி நாள்
இந்த நிலையில் நேற்றைய தினம் பௌர்ணமி நாளில் பள்ளிக்கு கொண்டு போய் விட்டனர். இதையடுத்து சர்வேஷிடம் பள்ளியில் அமர்ந்து படிக்குமாறும், பள்ளி விடும் நேரத்தில் வந்து அழைத்துச் செல்வதாகவும் கூறிவிட்டு அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

பள்ளி பேருந்து
இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து பள்ளி பேருந்து வாகனத்தில் வீடு திரும்பிய அந்த மழலை சர்வேஷ், தனது தாயை காணும் சந்தோஷத்துடன் பள்ளி வாகனத்தை விட்டு இறங்க முற்பட்டுள்ளார். அவரை இறக்கிவிட யாரும் இல்லாததால் தத்தி தடுமாறி புத்தகப் பையை மாட்டிக் கொண்டு இறங்க ஆயத்தமானார்.

சிறுவன் இறங்கினாரா இல்லையா
அப்போது அந்த சிறுவன் இறங்கினாரா என்பதை கூட டிரைவர் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. சர்வேஷ் பேருந்தை விட்டு இறங்குவதற்குள்ளாக பேருந்தை டிரைவர் இயக்கினார். அப்போது ஒரு கால் பேருந்திலும் ஒரு கால் தரையிலும் இருந்த நிலையில் குப்புற விழுந்தார்.

முன் சக்கரத்தில் சிக்கிய சர்வேஷ்
இதில் சர்வேஷ் முன் சக்கரத்தில் சிக்கியதுடன் பின் சக்கரமும் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மாணவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் தலை நசுங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பேருந்தில் மாணவர்களை ஏற்றி இறக்க உதவியாளர் யாரும் இல்லாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக அங்கிருந்தவர்கள் கூறுகிறார்கள்.

டிரைவர் கைது
எனவே தனியார் பள்ளிகளின் பேருந்துகளை அஜாக்கிரதை முறையில் கையாளும் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மீது தமிழக பள்ளிக்கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. பள்ளித் திறந்த முதல் நாளில் காலையில் குழந்தையை மகிழ்ச்சியாக பள்ளிக்கு அனுப்பிய நிலையில் தனது மகன் வீடு திரும்பாமல் போய்விட்டானே என அவரது தாய் கதறியது அனைவரையும் கலங்கச் செய்தது. தகவலறிந்து வேன் டிரைவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications