மேல்மலையனூர் அங்காளம்மன்..மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி..துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
மேல்மலையனூர் அங்காளம்மன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயங்களில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை: முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் பிரசித்தி பெற்ற அம்மன் தலங்களான மேல்மலையனூர் அங்காளம்மன், மேல்மருவத்தூர் ஆதிபராசத்தி ஆலயங்களில் சாமி தரிசனம் செய்தார். பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக திருவண்ணாமலை சென்றுள்ளார். அங்கு கருணாநிதி சிலை, அண்ணா நினைவு வளைவினை திறந்து வைத்தார்.
இந்த நிலையில் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தினமான நேற்று மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

துர்கா ஸ்டாலின்
அங்காளம்மன் கோவில் முதல்வர் மு.க ஸ்டாலினின் குல தெய்வ கோவிலாக கூறப்படுகிறது. நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் குல தெய்வமான அங்காளம்மன் கோயில் உள்ளது. அங்கு அடிக்கடி சென்றுவரும் துர்கா அந்தக் கோயிலைப் புதுப்பித்துள்ளார். குடும்ப ஜோதிடரின் அறிவுரைப் படி குல தெய்வம் கோயிலை துர்கா சீரமைத்து உள்ளார்.

மேல்மலையனூர் அங்காளம்மன்
செஞ்சி அருகே உள்ள அங்காளம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இந்த கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அமாவாசை நாட்களில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபடுவார்கள். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தினமான நேற்று துர்கா ஸ்டாலின் 40 நிமிடங்களுக்கு மேல் கோவிலை வலம் வந்து சாமி தரிசனம் செய்தார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில்
முன்னதாக செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி ஆலயத்திற்கு சென்ற துர்கா ஸ்டாலின் அம்மனுக்கு தீபாராதனை காட்டி வழிபட்டார். பின்னர் பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார். கடந்த ஆண்டு மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்ற மு.க ஸ்டாலின் பங்காரு அடிகளாரை சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். பங்காரு அடிகளார் குடும்பத்தினர் ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். மேலும், முதல்வர் ஸ்டாலினுடன் பங்காரு அடிகளார் குடும்பத்தினர் குரூப் போட்டோவும் எடுத்துக் கொண்டனர்.

ஆலய தரிசனம்
முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். திருச்செந்தூர், திருவண்ணாமலை ஆலயங்களில் வைத்த வேண்டுதல்களை தனது கணவர் முதல்வராக பதவியேற்ற பின்னர் நிறைவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications