4 கோடி சொத்து பத்திரத்தை கோவில் உண்டியலில் போட்ட நபர்.. திருவண்ணாமலை கோவிலில் அழுது துடிக்கும் மனைவி
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள ரேணுகாம்பாள் கோவில் உண்டியலில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் ரூ.4 கோடி மதிப்பிலான சொத்து பத்திரங்களை போட்டு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இன்று காசு எண்ணும் பணி நடந்த நிலையில் அதில் சொத்து பத்திரங்கள் இருந்ததை கண்டு கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மனைவி, 2 மகள்களுடன் ஏற்பட்ட பிரச்சினையில் அவருக்கு சொத்துக்களை வழங்காமல் சொத்து பத்திரங்களை உண்டியலில் போட்டு இருக்கிறார். தற்போது இவரது மனைவி மற்றும் மகள்கள் கோவிலில் சொத்து பத்திரங்களை திரும்ப தருமாறு கேட்டு காத்திருந்து வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் படவேடு ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் ராணுவ வீரர் வந்துள்ளார். அப்போது சாமி கும்பிட்டு விட்டு தான் கொண்டு வந்த ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்களை போட்டு சென்றுள்ளார்.

கோவில் உண்டியலில் சொத்து பத்திரங்கள்
இந்த நிலையில் உண்டியலில் விழுந்த பணங்களை கோவில் நிர்வாகம் சார்பில் இன்று எண்ணப்பட்டது. அப்போது உண்டியலுக்குள் சொத்து பத்திரங்கள் கிடந்ததை பார்த்து நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். முன்னதாக அந்த நபரும் நேரில் கோவிலுக்கு வந்து தான் சொத்து பத்திரங்களை கோவில் உண்டியலில் போட்டு இருப்பதாக தெரிவித்தார். விசாரணையில் இந்த சொத்து பத்திரங்களை உண்டியலில் போட்டது திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த படவேடு பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 65) என்பவர் தெரியவந்தது.
விஜயன் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவரது மனைவி கஸ்தூரி. கஸ்தூரி கண்ணமங்கலம் அருகே உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். ஆனால் கணவன் மனைவி இருவரும் தனித்தனியாக வசித்து வருவதும் தெரியவந்தது.
கோவிலுக்கு தான் சொந்தம்
கணவன் மனைவி இடையே ஏற்பட்டு வந்த தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த சொத்து பத்திரம் பற்றி விஜயனிடம் கோவில் நிர்வாகிகள் கேட்டபோது, இந்த சொத்துக்களை முறையாக கோவிலுக்கு எழுதி தருவதாக கூறியுள்ளார். இந்த சொத்துக்கள் கோவிலுக்கு தான் சொந்தம் என்றும் முறைப்படி இதை நான் எழுதி தருகிறேன்.
கடந்த மே மாதம் 2 ஆம் தேதி அந்த சொத்து பத்திரங்களை கோவிலில் போட்டதாகவும் அவர் கூறினார். இதனை கேட்டு கோவில் ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே கோவில் உண்டியலில் கணவர் விஜயன் பத்திரத்தை போட்ட தகவல் அறிந்து அவரது மனைவி அங்கு வந்தார். மகள்களையும் கையோடு அழைத்து வந்திருந்தார்.
4 கோடி மதிப்பில் 2 வீடுகள்
அப்போது கோவிலுக்கு இந்த சொத்துக்களை வழங்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று அவர்கள் கூறினர். மேலும், கோவில் ஊழியர்களிடம் சொத்து பத்திரம் எங்களுக்கு சொந்தமானது என்றும், அதனை எங்களது அனுமதி இல்லாமல் எப்படி எழுதி தர முடியும் என்றும் கேட்டு கதறி அழுதனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த சொத்து பத்திரத்தில் கோவில் அருகே 10 செண்ட் இடத்தில் 2 மாடி கொண்ட ரூ. 3 கோடி மதிப்பிலான வீடு இருப்பதாகவும், சற்று தொலைவில் 1500 சதுர அடியில் அமைந்துள்ள 1 கோடி மதிப்பிலான வீடு இருப்பதாகவும், இந்த 2 வீடுகளின் சொத்து பத்திரங்களை தான் விஜயன் கோவில் உண்டியலில் போட்டுள்ளார். இந்த 2 வீட்டினையும் விஜயன், தான் சம்பாதித்து கட்டியதாகவும், இது பூர்விக சொத்து கிடையாது என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications