3 குழந்தைகளை இடுப்பில் கட்டியபடி ஆற்றில் குதித்த தாய்! திருவண்ணாமலை மாவட்டத்தில் நிகழ்ந்த சோகம்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே 3 குழந்தைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு தாய் ஆற்றில் குதித்ததில், அந்த 3 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென்பெண்ணை ஆற்றில் தனது 3 குழந்தைகளையும் பறிகொடுத்த தாய் தற்போது சுய நினைவின்றி ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குடும்பச் சண்டை காரணமாக இந்த விபரீத முடிவை அவர் எடுத்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள சதாகுப்பத்தை சேர்ந்தவர் பரசுராமன். கூலித் தொழிலாளியான இவருக்கு அமுதா என்ற மனைவியும் நிலவரசு, குறளரசு, யாஷினி என மூன்று பிள்ளைகளும் உள்ளனர். இதில் யாஷினி 7 மாத கைக்குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. அமுதா தனது மூன்று குழந்தைகளோடு நேற்று பிற்பகல் தென் பெண்ணை ஆற்றுக்கு சென்றிருக்கிறார்.

ஆற்றில் குதித்து
தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்த்துக் கொண்டிருந்த அமுதா என்ன நினைத்தாரோ தெரியவில்லை, தனது மூன்று குழந்தைகளையும் துணியால் இடுப்பில் கட்டிக்கொண்டு திடீரென தென்பெண்ணை ஆற்றில் குதித்திருக்கிறார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அமுதாவையும் அவரது மூன்று பிள்ளைகளையும் ஆற்றிலிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதில் அமுதா உயிருக்கு போராடிய நிலையில் இருந்ததால் அவரை உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பிள்ளைகள் உயிரிழப்பு
பிள்ளைகள் மூவரும் பரிதாபமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக போலீஸார் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றில் 3 குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வு வாணாபுரம் பகுதி பொதுமக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 3 பிள்ளைகளுடன் தாய் ஆற்றில் குதித்த நிகழ்வை தான் தேநீர் கடைகள் தொடங்கி அனைத்து இடங்களிலும் அப்பகுதியில் பேசி வருகின்றனர்.

போலீஸ் விசாரணை
அமுதா தனது 3 பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்து தற்கொலை முடிவை எடுத்ததற்கு காரணம் குடும்பச் சண்டையா அல்லது வறுமையா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே அமுதா தற்போது சுய நினைவின்றி ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications