சமையலுக்கு 3 குழுக்கள்.. 2 நாட்களாக அணையாத அடுப்பு.. உறவினர்களால் உள்ளம் குளிர்ந்த டிடிவி தினகரன்..!
திருவண்ணாமலை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் திருமணம் நாளை திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள நிலையில் நேற்றே மன்னார்குடி உறவினர்கள் அனைவரும் அங்கு ஒன்று கூடிவிட்டனர்.
தனது ஒரே மகள் திருமண விழாவையொட்டி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கும் தினகரன், உறவினர்கள் வருகையால் உள்ளம் குளிர்ந்து காணப்படுகிறார்.
வேலூர், சென்னை, உள்ளிட்ட ஊர்களில் இருந்து சமையல் பணிகளுக்கு மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் 3 குழுக்களாக திருவண்ணாமலையில் முகாமிட்டு மூன்று வேளையும் உணவு சமைத்துக் கொடுத்து வருகின்றனர்.

டிடிவி தினகரன் மகள்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரினி மற்றும் தஞ்சை மாவட்டம் பூண்டி துளசி அய்யா வாண்டையார் பேரன் ராமநாதன் இணையருக்கு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நாளை திருமணம் நடைபெறுகிறது. இதற்காக டிடிவி தினகரன் உள்ளிட்ட மன்னார்குடி உறவினர்கள் அனைவரும் நேற்றே அங்கு சென்றுவிட்டனர். உறவினர்கள் அனைவருக்கும் அறுசுவை விருந்தளிக்க விரும்பிய தினகரன், சமையல் கலைஞர்களை 3 குழுக்களாக பிரித்து பணியமர்த்தியுள்ளார்.

சசிகலா வருகை
பேத்தி ஜெயஹரினியின் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக இன்று மாலை சசிகலா திருவண்ணாமலை புறப்பட்டுச் செல்கிறார். இந்த திருமண விழா மூலம் உறவுகள் அனைத்தையும் ஒன்றிணைக்க வேண்டும் என விரும்பும் சசிகலா அதற்கான பஞ்சாயத்தை திருவண்ணாமலையில் வைப்பார் எனத் தெரிகிறது. திவாகரனை திருமண விழாவில் பங்கேற்க வைத்து தினகரன் -திவாகரன் இடையே உள்ள மனக்கசப்பை மறக்கடிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார் சசிகலா.

முக்கிய நிர்வாகிகள்
இதனிடையே அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் திருவண்ணாமலையில் முகாமிட்டு திருமண விழாவுக்கான ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். சமையல், வரவேற்பு, விருந்து உபசரிப்பு, என ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை தாங்களாகவே ஏற்று தங்கள் தலைமையின் இல்ல மணவிழாவை சிறப்பித்து வருகின்றனர். கட்சியினர், உறவினர்கள் என அனைவருக்கும் மூன்று வேளையும் அறுசுவை உணவு இடையில் டீ, காஃபி, ஸ்நாக்ஸ் என சமையல் கலைஞர்கள் அடுப்பை அணைக்காமல் சமைத்துக்கொண்டே இருக்கின்றனர்.

திருமண வரவேற்பு
திருவண்ணாமலை கோயிலில் திருமணம் முடிந்தவுடன் மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் தஞ்சை மாவட்டம் பூண்டியில் தடபுடல் திருமண வரவேற்பு விழா நடத்தப்படவுள்ளது. அதில் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. இதனிடையே நாளை திருவண்ணாமலையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications