கூத்தாநல்லூர் அருகே இடிந்து விழுந்த பள்ளிக்கூடம்...கோயில் வளாகத்தில் தற்காலிக பள்ளி
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடத்தை சீர்செய்யாததால் அங்குள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக பள்ளிக்கூடத்தில் மாணாக்கர்கள் கல்வி பயிலும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கல்லாதார் இல்லாத மாநிலத்தை உருவாக்கிட ஆண்டுதோறும் தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில், கல்வித்துறைக்கு பெரும்பான்மையான நிதியை ஒதுக்கி வருகிறது. இருந்த போதிலும், அத்தகைய நிதி, மாணவ மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுகிறாதா என்று எண்ணத் தோன்றுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக நம் கண்முன் நிற்பது, திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல்கொண்டாழி பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி.
அம்பேத்கர் சிலைக்கு 'காவி' துண்டு! சர்ச்சையை தூண்டி விட்ட சமூக விரோதிகள்! வீறு கொண்டெழுந்த விசிக!
மோசமான நிலையில் பள்ளி கட்டிடம்
மேல்கொண்டாழி அரசு தொடக்கப்பள்ளியில், ஏழை எளிய மாணவ மாணவியர்கள் அதிகம் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி கட்டிடம் மோசமான நிலையில் இருந்து வந்ததையடுத்து, பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தரவேண்டுமென அப்பள்ளி ஆசிரியர் மட்டுமன்றி, மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
கோயில் வளாகத்தில் பள்ளிக்கூடம்
இத்தகைய சூழலில், கடந்த 2017-ம் ஆண்டு வீசிய கஜா புயலில், பள்ளிகட்டிடம் முற்றிலும் இடிந்து, வகுப்புகள் நடத்த முடியாத நிலை உருவானது. இதனையடுத்து மாவட்ட கல்வித்துறை நிர்வாகம், பள்ளிக்கு விரைவில் புதிய கட்டிடம் கட்டிதருவதாக கூறியதோடு, இடைக்கால நடவடிக்கையாக, மேல்கொண்டாழி அருகில் உள்ள மாரியம்மன் ஆலயத்தின் வளாகத்தில், தற்காலிக பள்ளி கூடத்தை அமைத்து செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கோயில் நிகழ்ச்சியால் கல்வி பாதிப்பு
சுமார் 400 சதுரஅடிக்கும் குறைவான இடத்தில் இயங்கும இப்பள்ளியில், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி செயல்பட்டு வரும் மாரியம்மன் ஆலயத்தில் அடிக்கடி திருமணம் மற்றும் பல்வேறு சுபநிகழ்ச்சிகள் நடைபெற்று வருவது வழக்கம். அவ்வாறு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வரும் மக்களின் கூட்டம் மற்றும் சுபநிகழ்ச்சிகளின்போது ஒலிபெருக்கியின் அதிகப்படியான சப்தம் போன்றவற்றால் பள்ளி ஆசிரியர்கள் தங்களது மாணவ மாணவியர்களுக்கு கல்வி போதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கட்டிடம் கட்ட நடவடிக்கையில்லை
மேலும், இதுபோன்ற இடர்பாடுகளால், மாணவ மாணவியர்கள் தங்களது தொடக்க கல்வியை கற்பதற்காக, கடந்த பல ஆண்டுகாலமாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். ஆனால் தற்காலிக நடவடிக்கை என்ற பெயரில் மாரியம்மன் ஆலயத்தில் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு என புதிய கட்டிடம் கட்டி தர எந்தவித நடவடிக்கையும மேற்கொள்ளவில்லை.
தமிழக அரசுக்கு கோரிக்கை
கூத்தாநல்லூர் நகராட்சி, மேல்கொண்டாழி பகுதியில் இயங்கும் அரசு தொடக்கப்பள்ளியின் நிலை குறித்து தமிழக முதல்வர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மாரியம்மன் ஆலயத்தின் வளாகத்தில் தற்காலிகமாக செயல்படும் இப்பள்ளியை, மாணவ மாணவியர்கள் நலன் கருதி, உடனடியாக இப்பள்ளிக்கென புதிய கட்டிடம் அமைத்துகொடுக்க முன்வரவேண்டுமென கல்வியாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.