புரட்டாசியில் திருப்பதி ஏழுமலையானை தரிசித்த துர்கா ஸ்டாலின்.. பேத்தியுடன் பலமான வேண்டுதல்
திருப்பதி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை மகாளய அமாவாசைக்கு முன்பாக திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார் துர்கா ஸ்டாலின். விஐபி பிரேக் தரிசனத்தில் பலமான வேண்டுதலை வைத்து விட்டு திரும்பியுள்ளார் துர்கா ஸ்டாலின்.
கலியுக கடவுளாக வணங்கப்படுகிறார் திருமலையில் அருள்பாலிக்கும் சீனிவாச பெருமாள். ஏழுமலையானை வணங்கினால் எத்தனை துன்பங்கள் வந்தாலும் விலகி ஓடிவிடும் என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் சாதாரண மக்கள் முதல் விவிஐபிக்கள் வரை ஏழுமலையானை தரிசனம் செய்ய வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பல லட்சம் பேர் வருகை தருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆண்டுக்கு ஒருமுறையாவது திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்வார். சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே திருப்பதி சென்று வேண்டுதல் வைத்து விட்டு வந்தார். தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் முதல்வரின் இல்லத்திற்கு வந்து ஆலயத்தின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் வேத பண்டிதர்கள் முதல்வர் வீட்டிற்கு வந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினிடம் பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினர்.
அப்போதே கோவிலுக்கு வரவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கும் துர்கா ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுத்துச்சென்றனர். இதனையடுத்து கடந்த 2021ஆம் ஆண்டு ஆடி அமாவாசை நாளில் திருப்பதி சென்று வேண்டுதலை நிறைவேற்றினார். புரட்டாசி மாதம் இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ளது. புரட்டாசி கடைசி சனிக்கிழமை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் வெள்ளிக்கிழமையான இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார்.
பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபட்டு வழக்கமாக கொண்டுள்ளார். தை அமாவாசையில் நடைபெறும் திருநாங்கூர் ஆலயங்களில் நடைபெறும் 11 கருடசேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார் துர்கா ஸ்டாலின். அதே போல 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோவில் 8 சுயம்பு சேத்திரங்களில் முதன்மையானதுமாகும். நெல்லை மாவட்டத்திற்கு வரும் போதெல்லாம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலுக்கு வந்து சாமி கும்பிடுவார் துர்கா ஸ்டாலின். தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பேத்தியுடன் வந்து பலமான வேண்டுதலை வைத்துள்ளார் துர்கா ஸ்டாலின்.
திமுக கட்சியின் கொள்கை கடவுள் மறுப்பு என்றாலும் துர்கா ஸ்டாலினுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம்.அதை ஒருபோதும் முதல்வர் ஸ்டாலின் தடுத்ததில்லை. தினம் ஏதாவது ஒரு கோவில், பிரார்த்தனை வழிபாடு என சென்று கொண்டே இருப்பார் . அந்த வகையில் இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிடுவதற்காக கோவிலுக்கு வந்த அவரை முன்வாசலில் இருந்து கோவிலுக்குள் அழைத்து சென்ற தேவஸ்தான அதிகாரிகள் அவர் சாமி கும்பிட தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.
சாமி கும்பிட்ட பின் அவருக்கு கோவில் உள்ள ரங்கநாயக்க மண்டபத்தில் கோவில் அதிகாரிகள் வஸ்திரம், லட்டு மற்றும் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். தொடர்ந்து கோவில் வேத பண்டிதர்கள் அவருக்கு வேத ஆசி வழங்கினர். அவற்றை பெற்றுக் கொண்டு,கோவிலை விட்டு வெளியில் வந்த துர்கா ஸ்டாலினுடன் பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
துர்கா ஸ்டாலினுடன் திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் பாலு என்கிற பாலசுப்ரமணியம் குடும்பத்துடன் உடன் வந்திருந்தார். திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழுவில் தமிழகத்தின் சார்பில் திருப்பூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம், சென்னை சேர்ந்த எஸ்.சங்கர், கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன் ஆகிய மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் திருப்பூர் பாலு தொழிலதிபர். முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் குடும்ப நண்பர் என்பதால் முதல்வரின் பரிந்துரையின் பேரில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications