திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..சிறுவனுக்கு லட்டு கொடுத்து வாழ்த்து
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். கோவில் சார்பில் தனக்கு அளிக்கப்பட்ட லட்டு பிரசாதத்தை சிறுவனுக்கு வழங்கி வாழ்த்து கூறினார்.
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்பது பலரது நம்பிக்கை. அதன் காரணமாகவே பல லட்சக்கணக்கானோர் பல மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.
அரசியல்வாதிகளும், உலகின் மிகப்பெரும் பணக்காரர்களும் விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி ஏழுமலையானை சில மணிநேரங்களில் தரிசனம் செய்கின்றனர். பல கோடி ரூபாய்களை கோவிலுக்கு நிதியாக தருகின்றனர். தங்கம், வெள்ளி போன்றவைகளையும் காணிக்கையாக வழங்குகின்றனர்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை ஆந்திர மாநில நிதி அமைச்சர் பி. ராஜேந்திர பிரசாத், திருப்பதி எம்பி குருமூர்த்தி, இணை மாவட்ட ஆட்சியர் டி.கே. பாலாஜி, திருப்பதி நகர மேயர் டாக்டர். சிரிஷா, ஆணையர் அனுபமா அஞ்சலி மற்றும் பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.

காணிப்பாக்கம் விநாயகர்
முதலில் அவர் காரில் காணிப்பாக்கம் விநாயகர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அங்கிருந்து மீண்டும் திருப்பதி வந்த அவர், காரில் திருமலைக்கு சென்றார். அங்கு அவரை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

ஏழுமலையான் தரிசனம்
தொடர்ந்து இன்று காலை கோவிலுக்கு சென்ற அவர் விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டார்.
சாமி தரிசனத்திற்காக கோவிலுக்கு வந்த அவரை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய் வி சுப்பா ரெட்டி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்று மூலஸ்தானம் வரை அழைத்து சென்றனர்.

லட்டு பிரசாதம்
ஏழுமலையானை வழிபட்ட பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் தீர்த்த பிரசாதங்கள்,நினைவு பரிசுகள், வேத ஆசி ஆகியவை வழங்கப்பட்டன. அவற்றை பய பக்தியுடன் பெற்றுக்கொண்டார் நிர்மலா சீதாராமன்.

சிறுவனுக்கு லட்டு கொடுத்த நிதியமைச்சர்
கோவில் பிரகாரத்தில் வலம் வந்த நிர்மலா சீதாராமன் அங்கிருந்த பக்தர்களிடம் பேசினார். அப்போது ஒரு சிறுவனிடம் அவனது படிப்பு உள்ளிட்டவைகள் குறித்து விசாரித்த அவர், பெருமாளின் லட்டு என்று கூறி சிறுவனுக்கு வழங்கினார். அதை சிறுவன் ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டார்.

வருமான வரி கருத்தரங்கம்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் வருமான வரி கருத்தரங்கில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications