கடவுளுக்கே ரெஸ்ட் கிடையாதா! ஓவர் டைம் பார்க்கும் "திருப்பதி ஏழுமலையான்".. 1 மணி நேரம்தான் ஓய்வாம்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை காண தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் அவருக்கு ஒரு மணி நேரம் மட்டுமே ஓய்வு கொடுக்கப்படுகிறது என தேவஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா காலம் என்பதால் திருப்பதி உள்ளிட்ட முக்கிய கோயில்களில் கட்டுப்பாடுகள் ஏற்பட்டன. இதையடுத்து கொரோனா இல்லா சான்றிதழ், கொரோனா இரு தவணை தடுப்பூசி போன்ற கட்டுப்பாடுகளால் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் குறைந்திருந்தது.
இதையடுத்து கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இதையடுத்து கோடை விடுமுறையின் போது திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தார்கள். இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது.
திருப்பதி ஏழுமலையான் தரிசனம்..செப்டம்பர் மாத கட்டண சேவை டிக்கெட் ஆன்லைனில் நாளை ரிலீஸ்
4 முதல் 5 மணி நேரம்
ரூ 300 சிறப்பு தரிசனத்திற்கு 4 முதல் 5 மணி நேரம் வரை காத்திருந்தனர். இந்த நிலையில் திருப்பதியில் தேவஸ்தானம் நடத்தும் 2 நாட்கள் பயிற்சி முகாமை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி தொடங்கி வைத்தார். தேவஸ்தான தலைமை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர் பேசினார்.
ஏழுமலையான்
அவர் பேசுகையில் ஏழுமலையான் கோயிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதால் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பை அதிகரிக்க திருப்பதி திருமலை இடையே உள்ள மலைப்பாதையில் வேக கட்டுப்பாடு அமைக்கப்படும். வாகனங்கள் அதிவேகமாக வந்தால் உடனுக்குடன் அபராதம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஸ்கேனர்
வாகன எண் பலகை ஸ்கேனர் அமைக்கப்படும். இதன் மூலம் விபத்து நடந்தாலோ அல்லது திருட்டு நடந்தாலோ உடனடியாக விவரம் அறிய இது உபயோகமாக இருக்கும். உண்டியல் பணம் எண்ணும் இடத்தில் குண்டு துளைக்காத கண்ணாடி அமைக்கப்படும். இதே போன்று ஏழுமலையானின் நகைகளை கொண்டு செல்லும் வாகனத்திற்கும் குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்படும்.
70 ஆயிரம்
ஏழுமலையானை கோடை காலத்தில் சராசரியாக தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசித்து வருகிறார்கள். புரட்டாசி மாதத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 1 லட்சம் பக்தர்கள் தரிசிப்பார்கள். பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களில் 10 லட்சம் பக்தர்கள் தரிசிப்பார்கள். இதில் கருட சேவைக்கு மட்டுமே 3 லட்சம் பக்தர்கள் வருவார்கள், ரத சப்தமி அன்று ஒரு லட்சம் பேர் தரிசனம் செய்வார்கள்.
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம்
தற்போது தினமும் 80 ஆயிர்ம பேர் ஏழுமலையானை தரிசிக்கிறார்கள். சேவாக்கள் மூலம் 3,500 பேரும் விஐபி தரிசனம் மூலம் 4 முதல் 5 ஆயிரம் பேரும் சர்வ தரிசனம் மூலம் 25 முதல் 45 ஆயிரம் பேரும், முதியோர், மாற்றுத் திறனாளி பக்தர்கள் என 2 ஆயிரம் பேரும் சராசரியாக 80 ஆயிரம் பேர் தரிசனம் செய்கிறார்கள். இதனால் ஏழுமலையானுக்கு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே ஓய்வு அளிக்கப்படுகிறது என்றார்.
சுப்ரபாதம் சேவை
பொதுவாக இரவு 12 மணிக்கு மேல் அதிகாலை 3 அல்லது 4 மணி வரை ஏழுமலையானுக்கு ஓய்வு வழங்கப்படும். அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாதம் பாடப்பட்டு ஏழுமலையானை துயில் எழுப்பி சில பூஜைகள், புனஸ்காரங்கள் செய்யப்பட்டு பின்னர் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.