வைகுண்ட ஏகாதசி..திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சொன்ன குட் நியூஸ்
திருமலை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதிக்கு வரும் பக்தர்கள் வழக்கம் போல சாமி தரிசனம் செய்ய வரலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் ஜனவரி 11 வரை சிறப்பு தரிசனம் செய்ய முன்பதிவு செய்வோருக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என தகவல் வெளியான நிலையில் அது தவறான தகவல் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
உலகத்தின் பல நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணிவது அவசியம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பொது இடங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
திருப்பதி சொர்க்கவாசல் திறப்பு! வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் புக் செய்வது ரொம்பவே ஈஸி! இதை பாருங்க
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பரவத்தொடங்கிய போது லாக்டவுன் விதிக்கப்பட்டது. கோவில்கள் மூடப்பட்டன. திருப்பதி கோவில் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருகின்றனர். நாள் கணக்கில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் உண்டியலில் தங்களின் சக்திக்கு ஏற்ப காணிக்கை செலுத்துகின்றனர். தலைமுடியை காணிக்கையாக செலுத்துகின்றனர். காணிக்கையாக கிடைத்த தலைமுடியை ஏலம் விடுவதன் மூலம் பல கோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருமானம் கிடைக்கிறது. அதே போல இந்த ஆண்டு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உண்டியல் வருமானம் கிடைத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜனவரி 1ம்தேதி புத்தாண்டு மற்றும் 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த 11 நாட்களும் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்கள் என 2.20 லட்சம் டிக்கெட்கள் சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியானது. இதனுடன் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம் டிக்கெட்டும் வெளியிடப்பட்டது.
இதுதவிர திருப்பதியில் 9 இடங்களில் வைகுண்ட ஏகாதசிக்கான 10 நாட்களுக்கான இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட் வரும் 1ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 50 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கக்கூடிய நிலையில் முதலில் வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வரவேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தேவஸ்தான இணையத்தில் அறிவிப்பு வெளியானது. இதனால் பக்தர்கள் கவலையடைந்தனர். ஏழுமலையானை வைகுண்ட ஏகாதசி நாளில் தரிசனம் செய்ய முடியாமல் போய் விடுமோ என்று கவலையடைந்தனர்.
இந்நிலையில் தேவஸ்தான அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி தேவஸ்தான மக்கள் தொடர்பு துறை அதிகாரி ரவி, ஏழுமலையான் கோயிலில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசிக்கான 11 நாட்களுக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு தேவஸ்தான இணையத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 48 மணி நேரத்திற்குள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வரவேண்டும். கோவிட் நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் என நிபந்தனைகள் வைக்கப்பட்டிருந்தது. இது தவறுதலாக இணையத்தில் வெளியாகி விட்டது.
கொரோனா நிபந்தனைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் எவ்வித வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடாததால் பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்திற்கு வரலாம் என்று தெரிவித்துள்ளார்.