வரிசையா வர்றாங்க.. எடப்பாடி பழனிசாமியும் திமுகவுக்கு வருவார்.. ஆனா.. ட்விஸ்ட் வைத்த ஆர்.எஸ்.பாரதி!
திருப்பூர் : அதிமுகவினர் பலர் தொடர்ந்து திமுகவிற்கு வந்து கொண்டிருப்பதால் விரைவில் எடப்பாடி பழனிசாமியே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என திமுக முன்னாள் எம்.பி ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி திமுகவுக்கு வந்தாலும் அவரைச் சேர்த்துக் கொள்ள மாட்டோம், பதவி கொடுத்தவருக்கே துரோகம் செய்த ஈபிஎஸ்ஸை கட்சியில் இணைத்துக்கொள்ள மாட்டோம் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
நேற்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் இருவர் திமுகவில் இணைந்த நிலையில், மேலும் சிலரும் திமுகவிற்குத் தாவத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் திமுக முன்னாள் எம்.பி ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசினார்.
அண்ணாமலை ஐபிஎஸ் படித்தாரா? வரலாறு தெரியாதவர்களுக்கு பாஜகவில் பதவி.. மதுரையில் சீறிய ஆர்எஸ் பாரதி!
தமிழகத்தை பின்தொடரும் மாநிலங்கள்
இந்தக் கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை மேற்கு வங்கம், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் தங்கள் மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்ற தயாராகி வருகின்றனர். இந்தி பேசினால் மட்டுமே எதிர்காலம் என்ற பொய் பரப்புரையை பாஜக மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்தி பேசக்கூடிய மக்கள் தமிழகத்திற்கு அதிக அளவு வேலைக்கு வருகின்றனர்.
பாஜகவின் பொய்கள்
உலகிலேயே அதிக சம்பளம் வாங்கக்கூடிய சுந்தர் பிச்சை திமுக ஆட்சி காலத்தில் கல்வி கற்று ஆங்கிலம் தெரிந்ததால் தற்போது அதிக சம்பளம் வாங்கி வருகிறார். தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி பாஜககாரர்களைப் போல பேசி வருகிறார். ஆளுநரை திரும்பப் பெறக்கூடிய மனுவை குடியரசுத் தலைவரிடம் வழங்கி இருக்கிறோம். குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.
அதிமுகவை குறைகூற போவதில்லை
தமிழக சட்டப்பேரவையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தபோது அதிலிருந்து தங்களை காத்துக்கொள்ள சபாநாயகர் மீது குறை கூறி அதிமுக வெளிநடப்பு செய்தது. ஆனால் அவர்களை குறைகூற போவதில்லை. ஏனென்றால், பெரும்பாலான அதிமுகவினர் தற்போது திமுகவிற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
ஈபிஎஸ் வருவார்.. ஆனா
விரைவில் எடப்பாடி பழனிசாமியே திமுகவிற்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் பதவி கொடுத்தவர்களையே காட்டிக்கொடுத்த எடப்பாடி பழனிசாமியை திமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம். என்னதான் இருந்தாலும் அதிமுக திமுகவிற்கு பங்காளிதான், ஆனால் பாஜக திமுகவிற்கு மட்டுமல்ல நம் இனத்திற்கே பகையாளி" எனப் பேசினார் ஆ.எஸ்.பாரதி.
50 எம்.எல்.ஏக்கள்
சில வாரங்களுக்கு முன்னர் அதிமுகவில் இருக்கும் பலர் திமுகவுடன் பேசி வருவதாக திமுகவினர் தெரிவித்து வந்த நிலையில், எங்களுடன் 10 திமுக எம்எல்ஏக்கள் தொடர்பில் இருக்கிறார்கள் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் எடப்பாடி பழனிசாமி. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, அதிமுகவை சேர்ந்த 50 எம்எல்ஏக்கள், இரு எம்பிக்கள், 30 மாவட்டச் செயலாளர்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். 10 திமுக எம்எல்ஏக்களின் பெயர்களை எடப்பாடி வெளியிட்டால் 50 பேரின் பெயர்களை நாங்கள் வெளியிட தயார் என விளாசினார். இந்நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமியே திமுகவிற்கு வருவார் என ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.