திருமண போட்டோவை வாட்ஸ் அப்பில் அனுப்பிய செல்ல மகள்.. அதிர்ந்துபோய் உயிரை விட்ட பெற்றோர்
திருப்பூர்: ஒரே மகள், காதல் திருமணம் செய்து கொண்டதாக வாட்ஸ்அப்பில் அனுப்பிய திருமணமான போட்டோவை பார்த்து மனமுடைந்த தாய் , தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து குன்னத்தூரில் நடந்துள்ளது.
காதல் திருமணங்கள் பெற்றோருக்கு வேதனையையும், காதலர்களுக்கு மகிழ்ச்சியையும் தருகிறது. ஆனால் காதல் திருமணங்கள் கைகூடிய பின்னர் ஒருவருககு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழத்தெரியாமல் சண்டைபோட்டு கடைசியில் சோகத்தில் சிக்கி கொள்வது அதிகமாக உள்ளது.
இதனிடையே காதல் திருமணங்களால் அவமானம் மற்றும் துக்கம்அடைந்து பெற்றார்கள் விபரீதமான முடிவினை எடுப்பது அதிகமாக உள்ளது.

கோவையில் படித்தார்
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து குன்னத்தூர் அருகே பொளையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (65). இவரது மனைவி சுமதி (55). இவர்களுக்கு ஜனனி (23) என்ற மகள் உள்ளார். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபி டாக்டருக்கு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

ஊரடங்கால் தவிப்பு
ஜனனிக்கு அதே பகுதியை சேர்ந்த இறைச்சிக்கடை நடத்திவரும் சம்பத் (41) என்பவருக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது. ஜனனியின் காதலுக்கு அவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். கொரோனா தொற்று ஊரடங்கால் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த ஜனனி செய்வதறியாமல் இருந்துள்ளார்.

காதல் திருமணம்
தற்போது அரசு அறிவித்த தளர்வுகளால் மீண்டும் கல்லூரி திறக்கப்பட்டது. இதை நல் வாய்ப்பாக நினைத்த ஜனனி கோவையில் சம்பத்தை நேற்று திருமணம் செய்துள்ளார். இதையடுத்து இரவு தனது தந்தையின் வாட்ஸ் அப்பிற்கு கோவையில் தனது காதலனுடன் திருமணம் செய்து கொண்டதாகவும், அதற்கான போட்டோவையும் அனுப்பி வைத்துள்ளார்.

உயிர் பிரிந்தது
இதனை பார்த்து மனமுடைந்த ஜனனியின் தாய், தந்தை இருவரும் வாழைப்பழத்தில் விஷ மாத்திரையை வைத்து சாப்பிட்டுவிட்டு தூக்கு மாட்டிக்கொள்ள தயாரான நிலையில் விஷ மாத்திரையால் மயக்கமானவர்கள் உயிர் அப்படியே பிரிந்துள்ளது.

விசாரணை
இன்று காலை வீட்டிற்கு வந்த உறவினர் கதவு தாளிடாமல் இருந்ததால் உள்ளே சென்று பார்த்த போது கணவன் மனைவி இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவர்களுக்கு அருகில் தெண்ணை மரத்திற்கு பயன்படுத்தப்படும் கொடிய விஷமான திம்மட் என்ற குருணை மருந்து பாட்டில்களும் கிடந்துள்ளது. இதுகுறித்து குன்னத்தூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications