திருப்பூர் ரிதன்யாவின் 3 சிம் கார்டு.. செல்போனில் புதிய ஆடியோ ஆதாரம்! வரதட்சணை கேஸில் புது திருப்பம்
திருப்பூர்: திருப்பூர் ரிதன்யா மரணத்தின் அதிர்ச்சி இன்னமும் விலகவில்லை. காவல்துறை, நீதித்துறை மற்றும் அரசு உரிய விசாரணை மேற்கொண்டு எனது மகளின் இறப்புக்கு நீதி வழங்க வேண்டும், நீதி கிடைக்கும் வரை எனது சட்டப் போராட்டம் தொடரும் என்று கண்ணீருடன் தொடர்ந்து சொல்லி வருகிறார் ரிதன்யாவின் தந்தை.. ரிதன்யா தற்கொலை வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் புதிய உத்தரவு ஒன்றை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் அண்ணாதுரை என்பவரின் மகள் ரிதன்யாவின் தற்கொலை நாட்டையே உலுக்கி எடுத்துவிட்டது. 27 வயதான ரிதன்யா திருமணமாகி, 78வது நாளில் வரதட்சணை கொடுமையால் ஆடியோ வெளியிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்..

இந்த வழக்கில் ரிதன்யாவின் கணவா் கவின்குமாா், மாமனாா் ஈஸ்வரமூா்த்தி, மாமியாா் சித்ரா தேவி ஆகியோா் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
ஜாமீன் தந்த கோர்ட்
பிறகு கைதானவர்கள் ஜாமீன் கேட்டதையடுத்து, கைது செய்யப்பட்ட கவின்குமார் மற்றும் பெற்றோருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது..
பிறகு, ரிதன்யாவின் கணவர் கவின்குமார், சென்னை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.. அந்த மனுவில், "ஜாமீன் பெற்று வீடு திரும்பியபோது வீட்டில் ரிதன்யாவின் 2 செல்போன்களை கண்டெடுத்ததாகவும், அந்த செல்போன்களை ஆய்வு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
2 செல்போன்கள்
இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது கவின்குமார் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், "ரிதன்யாவின் 2 செல்போன்களை ஆய்வு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர்.. திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என ரிதன்யா தன்னுடைய தோழிகளிடம் பேசிய ஆடியோ ஆதாரங்கள் அந்த செல்போன்களில் இருக்கிறது" என்று கவின்குமார் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
உடனே இதற்கு பதிலளித்த காவல்துறை, "ரிதன்யாவின் செல்போன்களை புலன்விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தால் அவை ஆய்வு செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ரிதன்யாவின் 2 செல்போன்களையும் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவானது, ரிதன்யா வழக்கின் பரபரப்பை அதிகரித்துள்ளது.
3 சிம்கார்டுகள்
முன்னதாக, உயிரிழந்த ரிதன்யா 3 சிம்கார்டை பயன்படுத்தி வந்ததாக சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரவின. இதுகுறித்து விசாரித்தபோது, ஏற்கனவே ஒரு செல்போனை பயன்படுத்தி வந்த ரிதன்யா, கவினுடன் நிச்சயதார்த்தம் முடிந்ததுமே, கவினுடன் பேசுவதற்காக 2வதாக புதிய சிம் கார்டை வாங்கினாராம்.
பிறகு, பெண்களுக்காகவே ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் நடத்தி வந்துள்ளார் ரிதன்யா.. இதற்காக பலருக்கும் ஆன்லைனில் கிளாஸ் நடத்த வேண்டியிருந்ததாலும், அது தொடர்பான விளம்பரங்களை செய்ய வேண்டியிருந்ததாலும், 3வது சிம்கார்டை பிசினஸ்-க்காக வாங்கி ரிதன்யா பயன்படுத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்தது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications