‘டிரம்ப் பெயரையாவது சொல்லுங்க மோடி.. திருப்பூரில் கொதித்த சு.வெங்கடேசன்
திருப்பூர்: இந்திய பொருட்களுக்கான அமெரிக்கா வரியை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பேசிய சிபிஎம் கட்சியின் எம்பி சு.வெங்கடேசன், மோடியும் டிரம்பும் 4 பேருக்கு தான் விசுவாசமாக உள்ளனர். டிரம்பின் பெயரை கூட மோடி உச்சரிப்பதில்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
போராட்டத்தில் பேசிய வெங்கடேசன், "டொனால்ட் டிரம்ப், இவ்வளவு ஆணவத்தோடு வரியை உயர்த்தி வருகிறார். முதலில் 16 சதவீதம், பிறகு கேட்கவில்லை என்பதால் 25 சதவீதம், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்கிறீர்கள் என்று கூறி மேலும் 25 சதவீதம் வரியை உயர்த்தியுள்ளார். டிரம்ப் இவ்வளவு ஆணவத்துடன் செயல்படுவதற்கு கடந்த 14 ஆண்டுகளாக மோடி பின்பற்றும் தவறான பொருளாதார கொள்கை, வெளியுறவு கொள்கை தான் காரணம்.

அமெரிக்க ஆதரவு என்ற இந்திய நிலையை அமெரிக்காவுக்கு கண்மூடித்தனமாக ஆதரவு என்று மாற்றினார் மோடி. அமெரிக்காவுக்கான கண் மூடித்தனம் என்ற நிலையை, டிரம்புக்கு கண்மூடித்தனமான ஆதரவு என்று மோடி மாறினார். தன் காலுக்கு கீழ் ஒருத்தன் விழுகிறான் என்று இறக்கப்பட வேண்டிய அவசியம் டிரம்புக்கும் இல்லை, உலகில் யாருக்கும் இல்லை.
இதனால் இந்தியா பொருளை டிரம்ப் அடித்து பிடுங்க தொடங்கியுள்ளார். இந்திய அரசு பருத்தி இறக்குமதிக்கான வரியை முழுமையாக நீக்கியுள்ளது. நம் ஜவுளிக்கு அமெரிக்கா வரியை உயர்த்துகிறது. இங்கு அவர்களின் பருத்தி இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்காமல், வெளிநாட்டு பருத்திக்கு மோடி அரசு வரி விலக்கு அளிக்கிறது.
அப்பட்டமான அமெரிக்க அடிமைத்தனத்தை வெளிப்படுத்துகிறது. டிரம்ப் நேரடியாக இந்தியா மீதான தாக்குதலை கட்டவிழ்க்கிறார். டிரம்ப், மோடி இருவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இருவரும் தங்களின் நண்பர்களுக்கு விசுவாசமாக உள்ளார்கள். நாட்டிற்கு விசுவாசமாக இல்லை. நாட்டிற்கு விசுவாசமாக இல்லாமல் 4 பேருக்கு மட்டும் மோடி விசுவாசமாக இருக்கிறார்.
உக்ரைன் போரை மோடி நடத்துகிறார் என்று அமெரிக்கா சொல்கிறது. ஆபரேஷன் சிந்தூரையே நான் தான் நடத்தினேன் என்று சொல்ல அவரால் முடியவில்லை. அதனால் இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் சொல்கிறார். மோடி, டிரம்பிடம் பேசினால் இந்த பிரச்சனை முடிந்துவிடும் என்று இங்குள்ள ஒரு தொழிலதிபர் சொல்கிறார்.
மோடி டிரம்பிடம் பேசுவது இருக்கட்டும், முதலில் டிரம்பின் பெயரை உச்சரிக்க சொல்லுங்கள். பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது, அதன் எதிர்க்கட்சி தலைவராக இருந்த சுஸ்மா ஸ்வராஜ், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 60 ஆக வீழ்ந்தபோது இந்மிய மானமே போய்விட்டது என்று போராட்டம் நடத்தினார். இன்றைக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 90ஐ தொட்டுவிட்டது.
இந்தியாவின் மானம், மரியாதை எல்லாம் போய்விட்டது. எப்போது அதைப்பற்றி பேசுவீர்கள். இந்திய அரசியல் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட தோல்வியால் இந்த நிலைக்கு வந்துள்ளது. தமிழ்நாடு பொருள் உற்பத்தி மாநிலம். இந்த வரி விதிப்பால் அசாம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் பாதிக்கப்பட போவதில்லை. உற்பத்தியால் 100 ஆண்டுகளாக எழுந்து நிற்கிற தமிழகத்திற்கு தான் அடி. அதன் காரணமாக தான் மோடி வாய் திறப்பதில்லை.
ஒருபக்கம் டிரம்ப், இன்னொரு பக்கம் தமிழ்நாடு இரண்டு பயங்களுக்கு நடுவே இருக்கும் மோடிக்கு எதிராக துணிந்து நிற்போம். அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும். தொழில் நிறுவனங்கள் கேட்கும் அனைத்து விஷயங்களையும் உடனடியாக செய்ய தீர்வு கிடைக்கும் வரை ஓயாமல் போராட்டம் நடத்துவோம்." என்றார்.












Click it and Unblock the Notifications