பள்ளியில் பல்லி... மதிய உணவால் மயங்கி விழுந்த பிள்ளைகள்.. ஆம்புலன்சும் ரிப்பேர் ஆனதால் பரபரப்பு
ஆம்பூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நரியம்பட்டு அங்கன்வாடி மையத்தில் உணவு சாப்பிட்டு வாந்தி எடுத்த குழந்தைகள் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்ததாத தெரிகிறது.
5 குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனமும் பழுதாகி நின்றதால் பெற்றோரே குழந்தைகளை தூக்கிக்கொண்டு மருத்துவமனை ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதிய உணவருந்திய குழந்தைகள்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 24 குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு குழந்தைகள் படித்து விட்டு வழக்கம்போல் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று அங்கன்வாடி மையத்திற்கு வந்த குழந்தைகளில் முதலில் 5 குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். 10 நிமிடங்கள் கழித்து மற்ற குழந்தைகள் உணவை சாப்பிடத் தயாராக இருந்தனர். இந்நிலையில் முதலில் சாப்பிட்ட குழந்தைகள் ஒவ்வொருவரும் அடுத்தடுத்து வாந்தி எடுக்க ஆரம்பித்தனர். இதனால் அங்கன்வாடி ஊழியர்கள், சமையல் செய்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சில குழந்தைகள் வாந்தி எடுத்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். இதையடுத்து உள்ளூர் மக்கள் உதவியுடன் 5 குழந்தைகள் அருகில் உள்ள நரியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். மற்ற குழந்தைகளுக்கு உணவு கொடுக்காமல் நிறுத்திவைக்கப்பட்டது.

நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ்
முதலில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முதலுதவி சிகிச்சைக்குப் பின் ஆம்புலன்ஸ் அரசு மருத்தவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. சிறிது நேரத்தில் வந்த ஆம்புலன்ஸ் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சென்ற சிறிது தூரத்தில் பழுதாகி நின்றது. நின்று போன ஆம்புலன்ஸ் பழுதை சரி செய்ய நேரம் ஆகும் என ஓட்டுநர் சொன்னதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஆம்புலன்சில் இருந்த குழந்தைகளை அருகில் இருப்பவர்கள் துணையுடன் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனை சென்ற ஆட்சியர்
சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வா, ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் அரசு மருத்துவமனைக்கு சென்று பெற்றோரிடம் குழந்தைகளின் நலன் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் மருத்துவர்களிடமும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்து உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் தெரிவித்தனர்.

பல்லி விழுந்ததால் பாதிப்பு
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த மாவட்ட ஆட்சியர், நரியம்பட்டு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையல் செய்த உணவில் சிறிய பல்லி ஒன்று விழுந்துள்ளது. அது தெரியாமல் உணவை குழந்தைகளுக்கு பரிமாறியதால்தான் இந்த துரதிர்ஷ்ட சம்பவம் நடந்துள்ளது. 24 குழந்தைகளில் முதல் 5 குழந்தைகள் மட்டுமே சாப்பிட்டவுடன் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் மற்றவர்களுக்கு உணவு தரமால் நிறுத்தப்பட்டதால் அசாம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. சிகிச்சை பெறும் குழந்தைகள் 24 மணிநேரமும் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார்கள். மேலும் உணவு வழங்குவதில் கவனக்குறைவாக இருந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications