திருப்பூர் பள்ளி வகுப்பறையில் இப்படியா ஆகணும்.. மாணவி புவனேஸ்வரிக்கு என்ன நடந்தது? தீவிர விசாரணை
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே கல்லாபுரம் அருகே இந்திராபுதுநகர் மலைவாழ் குடியிருப்பை சேர்ந்தவர் முருகேசன்.கூலித்தொழிலாளியான இவரது மகள் புவனேஸ்வரிக்கு 17 வயது ஆகிறது.இவர் உடுமலையில் உள்ள பெண்கள் சமூக நல விடுதியில் தங்கியிருந்து அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு வகுப்பறையில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த கல்லாபுரம் அருகே இந்திராபுதுநகர் மலைவாழ் குடியிருப்பை சேர்ந்தவர் முருகேசன் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் புவனேஸ்வரிக்கு 17 வயது ஆகிறது. புவனேஸ்வரி உடுமலை பாபுகான் வீதியில் உள்ள பெண்கள் சமூக நல விடுதியில் தங்கி பள்ளியில் படித்து வருகிறார். விடுதியில் தங்கியபடி, உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை புவனேஸ்வரி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் வகுப்புகள் முடிந்ததும், மதிய உணவுக்காக விடுதிக்கு வந்தார். பள்ளியில் இருந்து விடுதி சுமார் 500 மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கு மதிய உணவு சாப்பிட்டு விட்டு, மீண்டும் புவனேஸ்வரி வகுப்பறையில் அமர்ந்து பாடத்தை கவனித்துள்ளார்.
அப்போது வகுப்பறையில் புவனேஸ்வரி திடீரென மயங்கி விழுந்தார். இதனைக்கண்ட சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக, உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே புவனேஷ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போர் மனதை கலங்க வைத்தது. இது குறித்து தகவல் அறிந்த உடுமலை போலீசார் புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே மாணவியின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். வகுப்பறையில் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் உடுமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications