"வாலை சுருட்டிக்கணும்".. மொத்தம் 400 தாமரைகள்.. அமெரிக்காக்காரனை மிரட்டணும்.. பிளானை உடைத்த தலைவர்
400 எம்பிக்களுடன் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று அண்ணாமலை உறுதி கூறியுள்ளார்
திருப்பூர்: "வரப்போகும் தேர்தலில் 400 எம்பிகளுடன் வெற்றி பெற்று மோடிஜியை மீண்டும் உட்கார வைக்க வேண்டும்.. மெஜாரிட்டிக்கு 273 எம்.பி போதும் என்றாலும், இந்த அமெரிக்காக்காரனை எல்லாம் மிரட்ட வேண்டும்.. 303 எம்பி கொடுத்ததற்கே பாகிஸ்தான், சீனாக்காரன் வாலை சுருட்டிக் கொண்டார்கள்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மத்திய அரசின் 8 ஆண்டுகள் சாதனை விளக்கம் கூட்டத்தை தமிழக பாஜக கொண்டாடி வருகிறது.. ஒவ்வொரு மாவட்டத்திலும், பாஜகவின் சாதனைகளை விளக்கி கோருவதுடன், எதிர்க்கட்சிகள் மீதான குற்றச்சாட்டுகளையும் மறக்காமல் பாஜக பதிவு செய்து வருகிறது.
அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநாடு நடைபெற்றது... வழக்கமாக, எந்த பாஜக கூட்டம் நடந்தாலும், அது தொடர்பான செய்திகள், சோஷியல் மீடியாவில் இடம்பிடித்துவிடும்..
ஷாக் ஆன பாஜக.. குப்பை வண்டியில் பிரதமர் மோடி, யோகி போட்டோக்கள்.. மாநகராட்சி ஊழியர் அதிரடி சஸ்பெண்ட்
தலைவா.. தலைவா..
ஆனால், கடந்த சில வாரங்களாகவே திருப்பூர் பாஜகவினர், பள்ளி, கல்லூரிகளில் நடக்க போகும் பாஜக விழா குறித்து புரோமோட் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அதன்படி, நேற்றைய தினம் விழா கூடியது.. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்தனர்.. மாநில தலைவர் அண்ணாமலை கூட்டத்தில் என்ட்ரி தந்ததுமே, "தலைவா.. தலைவா" என்ற விஜய் பாட்டு விண்ணை முட்டியது.. வரவேற்பு நிகழ்ச்சியே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது என்றால், இந்த கூட்டத்தில் அண்ணாமலை, பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகவே ஆரம்பித்துவிட்டது..
வீடியோக்கள்
பாஜகவினர், அண்ணாமலை பேச்சின் வீடியோக்களை ஷேர் செய்தும் வருகிறார்கள். அண்ணாமலை பேசியது இதுதான்: "இங்கே ஒரு கட்சி ஆட்சிக்கு வந்து, ஒரு வருடம் தான் முடிந்திருக்கிறது. அப்படி இருந்தும் பாஜகவுக்கு இவ்வளவு பெரிய கூட்டம் வந்திருக்கிறது என்றால், அரசியல் மாற்றம் வேண்டும் என்பதுதான் காரணம்... பிரதமர் மோடியின் 8 ஆண்டு ஆட்சியை ஏற்றுக் கொண்டு, மீண்டும் நல்லாட்சி தொடர வேண்டும் என நினைக்கின்றனர். டிஜிட்டல் இந்தியா என்று சொன்னதுமே, எதிர்க்கட்சிகள், சாத்தியமில்லை என்றார்கள்..
நல்லா இருக்கீங்களா?
ஆனால், கடந்த மாதம் மட்டும்10 லட்சம் கோடி ரூபாய் டிஜிட்டல் பரிவர்த்தனை நடந்திருக்கிறது. திமுக தலைவர்கள் தனித்தமிழ்நாடு வேண்டும் என்று முதல்வரை மேடையில் வைத்துக் கொண்டு பேசுகின்றனர்... ஆனால், மோடி எங்கே போனாலும் சரி, அவரது தாய் மொழியான குஜராத்தில் பேச மாட்டார். யாரைப் பார்த்தாலும், நல்லா இருக்கீங்களா? என்றுதான் விசாரிப்பார்.. ஐநா சபைக்கு சென்றால் கூட, 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று தான் சொல்வார்... எந்த நேரத்திலும் தமிழ்நாட்டை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.
எம்பிக்கள்
தமிழ்நாட்டில் இருக்கிற பிரச்சனையை விட்டுவிட்டு, உதயநிதிக்கு என்ன பட்டம் கொடுப்பது என்பதில் தான் இவர்கள் போட்டி போடுகின்றனர்.. இந்த பொழப்பு தேவையா? 2024 நாடாளுமன்ற தேர்தலில் 400 எம்பிகளுடன் நாம் வெற்றி பெற்று மோடிஜி அமர வேண்டும்... மெஜாரிட்டிக்கு 273 எம்.பி போதுமே என்று கேட்கலாம். இந்த அமெரிக்காக்காரனை எல்லாம் மிரட்ட வேண்டும்.. இதே பாதையில் இந்தியா 10 வருடங்கள் பயணம் செய்தால், உலகத்தின் வல்லரசாக மாறிவிடும்... இதனால் இந்தியாவின் வளர்ச்சியை சில உலக நாடுகள் குறி வைக்கிறார்கள். 303 எம்பி கொடுத்ததற்கே பாகிஸ்தான், சீனாக்காரன் வாலை சுருட்டிக் கொண்டிருக்கின்றனர்.
பாஜக கொடிகள்
8 வருடங்களாகவே எங்கேயும் குண்டு வெடிக்கவில்லை. வெடித்தால் அந்த நாடே இருக்காது.. மோடி என்ற புதிய மந்திர சொல்தான் அந்த தைரியத்தை கொடுத்திருக்கிறது. 70 வருட காலமாக இருக்கும் திமுக, சாலையில் பாஜக கட்டும் கொடிகளை எடுத்து செல்கின்றனர்... அவர்கள் கண்களில் தோல்வி பயம் தெரிகிறது. தமிழக மக்களுக்கு பிரச்னை என்றால் முதலில் பாஜக குரல்தான் ஒலிக்கும்" என்றார் அண்ணாமலை... தமிழ்நாட்டில் 15 தாமரைகள் இப்போதே ரெடி என்று சொன்னவர், 400 தாமரைகளுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று சொல்லி உள்ளது, அரசியல் களத்தை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.