ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று திருச்சியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் விமான நிலையத்திற்கு திறந்தவெளி பரப்புரை வாகனத்தில் ரோடு ஷோ சென்றவாறே புறப்பட்டார். அப்போது அவரது வாகனத்திற்கு பாதுகாப்பு அளித்தபடி போலீசாரும் வந்துகொண்டிருந்தனர்.
இதில் கூட்ட நெரிசல் ஏற்படக் கூடாது என்பதற்காக தடுப்பு கம்பிகள், பேரிகேட் போட்டு மறைத்து இருந்த போலீசார் ஆதவ் அர்ஜூனா கார் செல்வதற்காக வழி ஏற்படுத்திக் கொடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது ஆதவ் அர்ஜூனா காரானது போலீஸ்காரர் ஒருவர் மீது மோதியது. அவரது காலில் ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சியில் விஜய் பரப்புரை
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வரும் தமிழக சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிடும் நிலையில், பெரம்பூரில் கடந்த 30 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்று திருச்சி கிழக்கில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேசபாண்டியிடம் வேட்புமனுவை விஜய் தாக்கல் செய்தார். தொடர்ந்து பிரச்சாரம் செய்த விஜய் அங்கிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு புறப்பட்டார். அப்போது விஜய் திறந்த வாகனத்தில் நின்றபடியே தொண்டர்களுக்கு கை காட்டியபடி சென்றார். அவரது வாகனத்தை பின் தொடர்ந்து தொண்டர்களும் ஓடி வந்தனர்.
போலீஸ்காரர் கால் முறிந்தது?
இதற்கிடையே கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதற்காக ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகளின் கார்களை போலீசார் பேரிகாட் மற்றும் தடுப்பு கம்பிகள் அமைத்து தடுத்து நிறுத்தியிருந்தனர். இதையடுத்து விஜய்யின் வாகனம் சென்றதும், அவர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர். அப்போது ஆதவ் அர்ஜூனா கார் மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த காரானது அங்கு பணியில் இருந்த காவலர் ஒருவர் மீது மோதியது.
இதில் கீழே விழுந்ததில் அவரது காலில் கார் ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் கதறினார். இதையடுத்து அந்த போலீஸ்காரரை தவெக தொண்டர்கள் மற்றும் போலீசார் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ்காரரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மயங்கி விழுந்த பெண்
விஜய்யின் பிரச்சார வாகனத்தின் பின்னால் யாரும் செல்ல வேண்டாம் என்று சொல்லியும் விதிகளை பின்பற்றாமல் ஹெல்மெட் கூட அணியாமல் தவெக தொண்டர்கள் அட்டகாசம் செய்து வருகிறார்கள். விஜய் திருச்சிக்கு வரும்போதும் தம்பதி ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அரங்கேறியது.
இதேபோன்று பிரச்சார கூட்டத்திற்கு பெண்கள், குழந்தைகள் வர வேண்டாம் என்று சொன்னபோதும் அதையெல்லாம் மதிக்காமல் பலரும் நடந்துகொண்டனர். விஜய் பிரச்சார கூட்டத்தில் பெண் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவமும் அரங்கேறி இருக்கிறது. எதற்கெடுத்தாலும் போலீஸ்காரர்கள் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று தவெகவினர் குற்றச்சாட்டு வைத்து வரும் சூழலில், எந்த விதிகளையும் தவெக தொண்டர்கள் பின்பற்றாமல் இப்படி செய்வது பொதுமக்கள் மட்டுமின்றி பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications