திமுக ஊழல் அமைச்சர்கள்.. பாஜக போட்ட அடுத்த “லிஸ்டு”! 3 பேராம்.. விடவே மாட்டோம் என அண்ணாமலை சூளுரை
திருச்சி: தமிழ்நாடு அமைச்சர்களின் அடுத்தக்கட்ட ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்றும், 2, 3 அமைச்சர்கள் இந்த பட்டியலில் உள்ளதாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.
பாஜக மாநில இளைஞரணி செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாடாளுமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய இளைஞர் அணி தலைவருமான தேஜஸ்வி சூர்யா, மற்றும் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செயற்குழு கூட்டத்திற்கு பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "மண்ணை சார்ந்து, தர்மத்தை சார்ந்து இல்லாவிட்டால் எந்த ஒரு அரசியல்வாதியும் வெற்றி பெற முடியாது.

குடும்ப ஆட்சி
லாலு பிரசாத் யாதவ் இதற்கு உதாரணம். பீகாரில் சிறப்பாக ஆட்சி செய்தவர் லாலு. ஆனால் பின்னாளில் அவர் பூஜ்யமாகிவிட்டார். திமுகவில் பொறுத்தவரை குடும்ப ஆட்சி தான், குடும்ப ஆட்சியை வைத்து திமுக தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. குடும்ப ஆட்சிக்காக தான் திமுக வேலை செய்கிறார்கள் என கூறுகிறார்கள்.

ஊழல் பட்டியல்
முதலமைச்சரின் மருமகன் தலையீடு எல்லாவற்றிலும் உள்ளது என்பது அனைவரது கருத்தாக உள்ளது. தமிழகத்தில் பல முதல்வர்கள் உள்ளார்கள். இதுதான் உண்மை. முதலமைச்சர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் முதலமைச்சர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். தமிழக அமைச்சர்களின் ஊழல் குறித்த அடுத்த பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.

பாஜக தொண்டர் மரணம்
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி அதற்காக தயாராக உள்ளது. இரண்டு, மூன்று அமைச்சர்கள் இந்த பட்டியலில் உள்ளார்கள். அரியலூர் விவசாயியும், பாஜக தொண்டருமான செம்புலிங்கம் காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தொடர்பாக, பாஜக சார்பில் கண்டனத்தை தெரிவிக்கிறோம். இந்த விவகாரத்தை பாஜக விடப்போவதில்லை.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம் இளைஞர்களை பாதிக்கிறது. தற்கொலைக்கு காரணமாக உள்ளது. அதை தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தைம் முறை படுத்த வேண்டும். இதற்கான தீர்வு வேகமாக கிடைக்க வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பு. காவி எந்த கட்சிக்கும் பொதுவானது இல்லை. பாஜக அதனை சொந்தம் கொண்டாட விரும்பவில்லை.

ஆளுநர் ரவி
இந்த தேசத்தை, மக்களை நேசிப்பவர்கள் அனைவருக்கும் காவி பொதுவான ஒன்றுதான். பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லை, கேரளா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டில் ஆளுநரை அரசியலுக்காக மட்டும் பேசுகிறார்கள். ஆளுநர் தமிழ், திருக்குறள், திராவிடம் குறித்து பேசுவது அவரின் தனிப்பட்ட கருத்து. அதை பெரிதுப்படுத்த வேண்டாம்.

மதுவிலக்கு
தமிழகத்தில் மதுவிலக்கு சட்டம் அமல் என்று சொன்னால் கதறுவார்கள். இரண்டு ஆண்டுகளில் 10% முதல் 20% டாஸ்மாக்கை குறைத்து, தனியார் மூலம் அனுமதி கொடுத்து குறைந்த அளவு விற்பனை செய்யட்டும். அதனைத் தொடர்ந்து மதுவிலக்கை அமல்படுத்தட்டும். அவ்வாறு முதலமைச்சர் செய்தால் முதல் ஆளாக எழுந்து நின்று கைதட்டுவேன்.












Click it and Unblock the Notifications