“மனுதர்மத்தை” தடை செய்யுங்க.. திருச்சியில் திடீர் ஆர்ப்பட்டம்! 150 பேர் கைது - ஆ.ராசா சொன்னாரே
திருச்சி: மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அருகில் மனு தர்மத்தை தடை செய்ய வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திராவிடர் கழக நிறுவனரும், சமூக நீதி போராளியுமான தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பேற்ற திமுக, தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார். இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் சிலைக்கு மரியாதை செய்து சமூக நீதி உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்.
திருச்சியில் பெரியார் பிறந்தநாள்
இதேபோல் தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாரின் முழு உருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
போலீஸ் பாதுகாப்பு
இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு மனு தர்மத்தை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். அதனை தொடர்ந்து காலை முதலே வழக்கத்திற்கு மாறாக போலீஸ் பாதுகாப்பு அதிகரித்து காணப்பட்டது.
மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
இதனை தொடர்ந்து அங்கு வந்த மக்கள் அதிகாரம் உட்பட மேலும் சில அமைப்பை சார்ந்தவர்கள் 150 க்கு மேற்பட்டோர் பெரியார் சிலை முன்பாக நின்றுகொண்டு மனு தர்மத்தை தடை செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மனு தர்மத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. அவர்களை போலீசார் தடுத்த நிறுத்தி கைது செய்தனர்.
ஆ.ராசா பேச்சு
திமுக எம்பி ஆ.ராசா கடந்த சில நாட்களுக்கு முன் "இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்." என மனு தர்மத்தில் இருப்பதை சுட்டிக்காட்டி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அதற்கு தடைகோரி போராட்டம் நடைபெற்றுள்ளது.