“5 கட்சி மாறிய செந்தில் பாலாஜி சொன்னது உண்மைதான்.. எனக்கு பக்குவம் போதாது” - அண்ணாமலை பதிலடி!
திருச்சி : ஐந்து கட்சி மாறியவர், காற்றில் இருந்தும், நிலக்கரியில் இருந்தும் விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர் அமைச்சர் செந்தில் பாலாஜி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மேலும், செந்தில் பாலாஜி சொன்னதுபோல எனக்கு பக்குவம் கிடையாது எனக்கு பக்குவமாக ஊழல் செய்யத் தெரியாது என பதிலடி கொடுத்துள்ளார் அண்ணாமலை.
மேலும், சசிகலா பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம் என்ற நயினார் நாகேந்திரனின் கருத்து குறித்தும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் அண்ணாமலை.

செந்தில் பாலாஜி
கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசியுள்ளார். அண்ணாமலை பொய் சொல்வதற்காகவே பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகிறார். அண்ணாமலைக்கு புரிதலும் கிடையாது, புரிந்துகொள்ளும் பக்குவமும் கிடையாது. அவரைப் பற்றி எழுதியும், பேசியும் பத்திரிகையாளர்கள் தங்கள் பக்கத்தையும் தொலைக்காட்சிகள் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை பதிலடி
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் கருத்து குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு இன்று திருச்சியில் பதிலளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "5 கட்சி மாறியவர், காற்றில் இருந்து, நிலக்கரியில் இருந்து விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவர் செந்தில் பாலாஜி. அண்ணாமலைக்கு பக்குவம் இல்லை என்று சொல்லி இருக்கிறார் செந்தில் பாலாஜி. அவர் சொன்னதுபோல, எனக்கு பக்குவமாக ஊழல் செய்யத் தெரியாது. செந்தில் பாலாஜி கருத்தை முற்றிலுமாக ஏற்கிறேன். அண்ணாமலைக்கு பக்குவமாக ஊழல் செய்யத் தெரியாது. அண்ணாமலைக்கு ஊழல் செய்யவே தெரியாது" எனத் தெரிவித்துள்ளார்.

பாஜகவில் சசிகலா?
மேலும், சசிகலா பாரதிய ஜனதா கட்சிக்கு வந்தால் நாங்கள் அவரை வரவேற்போம் என்று பா.ஜ.க துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தது குறித்துப் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "நயினார் நாகேந்திரன் சொன்னது அவரது சொந்த கருத்து. கட்சியின் கருத்து அல்ல. பாஜகவில் யார் வேண்டுமானாலும் இணையலாம். குறிப்பிட்ட சிலர் இணைவது குறித்து டெல்லி தலைமை முடிவு செய்யும்" எனத் தெரிவித்துள்ளார்.
Recommended Video

ஊழல் திமுக
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, இதுவரை காணாத ஊழலை இனி வரும் 2 ஆண்டுகளில் தமிழகம் காணப்போகிறது. ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கென்றே தனி டோல்ஃப்ரீ நம்பரே ஆரம்பிக்க யோசித்து வருகிறோம். பாஜக வெளியிடும் ஊழல் குற்றச்சாட்டுகளை கேட்டு திமுக தங்களை திருத்திக்கொள்ள வேண்டும். இந்த ஆட்சியை கவிழ்ப்பது எங்களது நோக்கமல்ல எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications