மகாளய அமாவாசையில் சமயபுரம் மாரியம்மன்.. ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்
மகாளய அமாவாசை நாளில் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்த முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.
திருச்சி: ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்திற்கு வந்திருந்த முதல்வர் முக ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மகாளய அமாவாசை நாளில் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்த முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், சுக்கிரன் ஸ்தலமான ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் தரிசனம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளார்.
Recommended Video
ஸ்ரீரங்கம் ஆலயம் சுக்கிரன் ஸ்தலம். பரணி, பூரம், பூராடம் என்பது சுக்கிரனுக்கு உகந்த நட்சத்திரம். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஸ்ரீரங்கநாதர் உகந்த தெய்வம். வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்து வேண்டுதல் வைத்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. புரட்டாசி மாதமான இந்த மாதத்தில் நவராத்திரி உற்சவமும் தொடங்கியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் நட்சத்திரம் பூரம் நட்சத்திரம் என்பதால் சுக்கிரன் ஸ்தலமான ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்து தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார் அவரது மனைவி துர்கா ஸ்டாலின்.

ஆலய தரிசனம்
சட்டசபைத் தேர்தல் நேரத்தில் மு.க ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்த போது கோவில் கோவிலாக சென்று கணவர் முதல்வராக வேண்டும் என்று வேண்டிக்கொண்டார் துர்கா ஸ்டாலின். அந்த வேண்டுதல் நிறைவேறியதை அடுத்து பல முக்கிய ஆலயங்களுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார். திருப்பதி, திருவண்ணாமலை, திருச்செந்தூர் சென்று வந்துள்ள துர்கா ஸ்டாலின், திருச்சியில் உள்ள முக்கிய ஆலயங்களில் நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார்.

ரங்கநாதர் தரிசனம்
மகாவிஷ்ணுவின் 108 திவ்ய ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் கோயிலாக திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஆலயம் விளங்குகிறது. கோவிலுக்கு வந்த முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்ரீரங்கத்தில் வரவேற்பு
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் உள்ள கருடாழ்வார், ஆரியபட்டா வாசல் வழியாக அரங்கநாதர், பின்னர் ரங்கநாயகி தாயாரை தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்ய வந்த துர்கா ஸ்டாலினுக்கு ஸ்ரீரங்கம் கோவிலின் நிர்வாகம் சார்பிலும், தலைமை பட்டர் சுந்தர் அவர்களின் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மகாளய அமாவாசை
மகாளய அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமையன்று திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சில கிலோ மீட்டர்கள் பாதயாத்திரையாக நடந்து சென்று நன்றிக்கடன் செலுத்தினார். இதேபோல உறையூர் வெட்காளியம்மன் ஆலயத்திற்கும் சென்றும் வழிபட்டார்.

வேண்டுதல் நிறைவேற்றும் துர்கா
பெருமாள் பக்தையான துர்கா ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள முக்கிய பெருமாள் ஆலயங்களில் கணவர் முதல்வராக வேண்டும் என்று வேண்டுதல் வைத்து வரிசையாக நிறைவேற்றி வருகிறார். விரைவில் வட இந்தியாவில் உள்ள முக்கிய ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வேண்டுதல் நிறைவேற்றப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications